என் உதவியாளர் சொன்ன ஐடியாதான் கருப்பு பாட்டு! - சூர்யா நெகிழ்ச்சி | Suriya | Karuppu Thanks Meet
‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸில் வரும் கருப்பு பாட்டு, 25 ஆண்டுகளாக தன்னுடன் இருக்கும் உதவியாளர் குமார் சொன்ன ஐடியா என சூர்யா வெளிப்படுத்தினார். படம் எடிட் முடிந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு, பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதும், அந்த பாடலை எடுத்த முடிவுதான் கிளைமாக்ஸை வலுப்படுத்தியதாகவும், இந்த படத்திற்கு கடவுளின் கரம், ரசிகர்களின் அன்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிக பெரிய அளவில் கிடைத்துள்ளது. இன்று இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நடிகர் சூர்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் "சமீபமாக வந்த எந்த படங்களையும் அவ்வளவு சட்டென நான் முடிவு செய்தது கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், அந்த நாள் எல்லாமே சரியாக இருப்பதாக தோன்றியது. இது முழுக்க முழுக்க ஆர் ஜே பாலாஜி அவர்களின் விஷன் தான். அவர் சொல்லும் போதே தியேட்டரில் வேற மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையை வைத்துதான் எல்லா படமும் செய்கிறோம். ஆனால் முதல் நாளில் இருந்தே, முதல் சந்திப்பில் இருந்தே எல்லாம் சரியாக போனது. அதற்கு உறுதுணையாக இருந்தது ட்ரீம் வாரியர்ஸ். கருப்பு பட குழுவினர் அனைவரின் சார்பாகவும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த மாதிரியான ஒரு ரியாக்ஷனை தியேட்டரில் நான் சமீபத்தில் பார்த்ததில்லை. பெரிய அன்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. கடவுளின் கரம் இந்தப் படத்தின் மீது இருக்கிறது என்பதை நாங்கள் உணருகிறோம். ஒரு பத்து பேர் சேர்ந்து கதையை முடிவு செய்கிறோம். ஆனால் அந்த உணர்வை எல்லோரிடமும் கடத்த முடிகிறது. தமிழில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து இதே ரியாக்ஷன் கிடைப்பது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம். இந்த தொழிலில் இருக்க பிடித்திருக்கிறது என்பதை மீண்டும் சொல்ல தோன்றுகிறது.
எல்லா படத்திற்கும் இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் இருக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக எல்லோரின் அன்பை ஒரு படம் பெறுகிறது என்பதும், சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதும் நினைக்கையில் அதில் பலரது பங்களிப்பை நினைவு கூற தோன்றுகிறது. குமார் என்ற தம்பி அவர் 25 வருடங்களாக என்னுடைய உதவியாளர். அவர் சொன்ன ஒரு விஷயம் என்ன என்றால் படத்தை தாண்டி க்ளைமாக்ஸில் கருப்பசாமிக்கு ஒரு பாட்டு வேலை செய்ய வேண்டும் என்றார். க்ளைமாக்சில் வந்த அந்த கருப்பு பாடல் படத்துக்கு சம்பந்தமே இல்லாத என்னுடைய உதவியாளரின் ஐடியா அது. படத்தை எடிட் செய்து முடித்து லாக் பண்ணிய பின்னர் ஐந்து மாதங்களுக்கு பிறகு எடுத்த பாட்டு தான் க்ளைமாக்சில் வரும் கருப்பு பாடல். அப்போது இருந்த பொருளாதார சூழல் காரணம் காட்டி, இந்தப் பாடல் ஐடியாவை டேபிளிலேயே க்ளோஸ் செய்திருக்கலாம். ஆனால் எடுத்துவிடலாம் என்ற முடிவுதான் க்ளைமாக்சில் பெரிய வலுவாக இருக்கிறது." என்றார் சூர்யா.

