"அப்பாவின் இந்த முடிவுக்கு காரணம்.." - கே ராஜன் மகன் உடைத்த உண்மை | K Rajan
பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜன் (85). இவர் நேற்று அடையாறு ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இன்று அவரது உடல் தண்டையார்பேட்டையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜனுக்கு பிரபு, கணேஷ், சுரேஷ் என மூன்று மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அதுபற்றி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் ராஜனின் மூன்றாவது மகனான சுரேஷ்.
அவர் பேசியபோது, "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவரும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே ராஜன், என்னுடைய அப்பா. நான் மூன்றாவது மகன். கொஞ்ச நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்தார். அதற்கு காரணம் என்னவென்றால், தயாரிப்பாளர் சங்கத்தில் படம் எடுப்பதற்காக நண்பர்கள் பலருக்கும் பணம் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை யாருமே திருப்பிக் கொடுக்கவில்லை. நான்கைந்து வருடங்களாக அவர் கேட்டுப் பார்த்தும், யாரும் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்த மனவேதனையால் அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்தது. அது குணமான பின்னர், நான் இந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டேன், யாரும் கொடுக்கவில்லை. இதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறோம். பணம் பெற்றவர்கள் திருப்பி எங்களிடம் அளித்தால் குடும்பத்துக்கு உதவிகரமாக இருக்கும். இது நடப்பதற்கு உதவியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மகள் ராஜேஸ்வரி பேசியபோது, "அவரது வாழ்க்கையை ஒரு பயோகிராஃபியாக எழுதலாம். ஏழையாய்ப் பிறந்தாலும் அவர் அடைந்த வளர்ச்சி பெரியது. சினிமா என்ற மாய உலகத்துக்குள் நுழைந்து ஒரு வீரனாக வாழ்ந்தார். அவரைப்போல் ஒருவர், இப்போது இல்லை என்ற சூழலில் தாழ்த்திப் பேசுவது என்பது திரையுலகத்தினருக்கே அவமானம். தயவுசெய்து எந்த மீடியாவும் எதுவும் தெரியாமல் பேச வேண்டாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது அவரவர் குடும்பத்துக்கே தெரியும். ஏதோ, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக அதை எல்லாம் போட வேண்டாம். இது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள்" எனப் பேசினார்.
தயாரிப்பாளர் ராஜனின் இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

