"விஜய் சாருக்கு சொன்ன கதை, ரஹ்மான் சார் இடத்தில் சாய் அப்யங்கர்.." - ஆர் ஜே பாலாஜி | Karuppu | RJB
ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' படத்தில் சூர்யா நடிக்கிறார். முதலில் விஜய்க்கு கதை சொல்லப்பட்டபோதும், சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. விஜய்க்கு கதை பிடித்திருந்தாலும், அவரின் அரசியல் நுழைவால் திட்டம் கைகூடவில்லை. 'கருப்பு' மே 16ம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா, இந்த்ரன்ஸ், அனகா ரவி எனப் பலரும் நடித்துள்ள இப்படம் மே 16ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஓன்றை அளித்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.
அதில் `நீங்கள் முதலில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குவதாக இருந்தது, ஆனால் அதை இயக்காமல் போக அதே கதையை ஹீரோ நடிக்கும் கதையாக மாற்றி விஜய்க்கு கூறினீர்கள். பின்னர் அந்தக் கதையை தான் சூர்யா நடிப்பில் இயக்கியுள்ளீர்கள் என ஒரு தகவல் பரவியது. அது உண்மை தானா?' எனக் கேட்கப்பட, "நான் 2023 ஆகஸ்ட் மாதம் 'கருப்பு' கதையை எழுதத் தொடங்கினேன். அந்தக் கதைக்கரு பெரிதாகவும் மேலும் சுவாரஸ்யமாகவும் வளர்ந்தபோது, இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் தேவை என்று உணர்ந்தேன். அந்தச் சூழலில், அந்த நட்சத்திரம் விஜய் சாராக இருந்தால் அற்புதமாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் ஏற்கெனவே 2021-22 வாக்கில் என்னிடம் ஒரு கதையைக் கேட்டிருந்தார். நான் சென்று அவரிடம் ஒரு கதையை விவரித்தேன். அதைக் கேட்ட பிறகு, அவர், "இது மிகவும் பெரியது. இதை நாம் எப்படி உடனடியாகச் செய்ய முடியும்?" என்று கேட்டார். இதை உடனடியாகச் செய்ய முடியுமா என்றும் கேட்டார்.
நான், சுமார் பதினான்கு மாதங்கள் ஆகும் என்று சொன்னேன். பிறகு, "இல்லை, இல்லை, என்னால் உடனடியாகச் செய்ய முடியாது. என் சொந்தப் படத்திற்கே நான் அவசரப்பட மாட்டேன். விஜய் சார் படத்திற்கு, நான் நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன்" என்று சொன்னேன். அதனால் அந்த வாய்ப்பை நான் கைவிட்டேன். ஆனால், அவருக்கு என் கதைக்கரு பிடித்திருந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் நினைத்தார்... அது அப்படித்தான் இருந்தது. எல்.கே.ஜி அல்லது மூக்குத்தி அம்மன் போன்ற, என் பாணியில் ஒரு சட்டையர் படம், குடும்பங்கள் பார்க்கக்கூடிய மென்மையான,
சுவாரஸ்யமான ஒன்று வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். இந்தக் கதையில் அந்த அம்சங்களும், ஒரு பெரிய நட்சத்திரத்திற்குப் பொருத்தமான விஷயங்களும் இருந்தன. நான் அவரைச் சந்தித்துக் கதையை விவரித்தேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது, அதன் பிறகு நாங்கள் பலமுறை சந்தித்தோம். ஆனால் அப்போதுதான் அவரும் அரசியலுக்குள் நுழைந்தார். அதனால் இறுதியில் அது கைகூடவில்லை. ஆனால் எனக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தக் கதையை நான் சூர்யா சாரிடம் விவரித்தேன். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்குப் பொருந்தும் வகையில் சில மாற்றங்களைச் செய்தேன். மூக்குத்தி அம்மன் 2-ஐ பொறுத்தவரை, முதல் பாகத்திற்குத் தொடர்ச்சி எடுக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அதன் தயாரிப்பாளர்கள் அப்படி நினைத்தார்கள். சுந்தர் சி, நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்... இவர்கள் எல்லோரும் என்னிடம் பேசினார்கள். இது அவர்களுடைய தயாரிப்பு என்பதால் அந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம்." என்றார்.
`ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகியதும், ஒரு அறிமுக இசையமைப்பாளரான சாய் அப்யங்கரை ஒப்பந்தம் செய்யும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?' என்றதும் "`ரஹ்மான் சார் போன்ற ஒரு பெரிய இசையமைப்பாளர் விலகினால், அடுத்த தேர்வும் அதே தரத்தில் உள்ள ஒருவராகத்தான் இருக்க வேண்டும்' என்று மக்கள் நினைக்கக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு முன்பு நான் சாயைச் சந்தித்ததில்லை. அவரிடம் நான் கண்டது அபரிமிதமான ஆற்றல். அந்த ஆற்றலை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். நான் தயாரிப்புக் குழுவிடமும் சூர்யா சாரிடமும் சொன்னேன். இயல்பாகவே, அது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் ரஹ்மான் சாருக்குப் பதிலாக ஒரு புதியவரை தேர்வு செய்வது ஒரு பெரிய மாற்றம். ஆனால் நான், `தயவுசெய்து என்னை நம்புங்கள்' என்று சொன்னேன். இது சாயின் முதல் பெரிய பட்ஜெட் படம், ஆனாலும் அவர் இப்போது இதுபோன்ற பல படங்களில் ஒப்பந்தமாகியுளார். இன்று, அது சரியான முடிவுதான் என்று அனைவரும் உணர்கிறார்கள்.
சாயின் brillianceக்கு ஒரு முறை உண்டு. நீங்கள் அவருடன் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டியதில்லை. மேலும், அவர் மிகவும் எளிதில் அணுகக்கூடியவர்; ஒவ்வொரு நாளும், அவர் ஏதேனும் ஒன்றை வழங்குவார். அவருக்கு நேரம் தேவைப்பட்டால், அவர் தெளிவாகத் தெரிவிப்பார். அந்தத் தெளிவு, அந்தச் செயல்முறையைச் சீராக்கியது. ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கே உரிய இசையமைப்பாளர்கள் உண்டு. அடுத்த தலைமுறை அவருடைய இசையை இன்னும் அதிகமாகக் கேட்கும் என்று நான் நினைக்கிறேன். " என்றார் ஆர் ஜே பாலாஜி.

