”ஊர்வசி அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கினேன்!” - மிஷ்கின் | Mysskin | Urvashi | Parimala & Co
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, அனந்திதா, சஞ்சனா எனப் பலரும் நடித்துள்ள படம் `பரிமளா & கோ'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய மிஷ்கின், "மிகச்சிறந்த நடிகர்கள் ஜெயராம் சார், ஊர்வசி அம்மா. அவர்களுடன் நடிக்க வைத்ததற்கு நன்றி பாண்டிராஜ். நான் போன படத்தில் ஜெயராம் சாரை ஒரு பாத்திரத்தில் நடிக்க அழைத்தேன். அது எப்படிப்பட்ட ரோலாக இருக்கும் என உங்களுக்கே தெரியும். சார் மிகவும் தன்மையாக அதனை மறுத்தார். சினிமாவில் நோ சொல்வது என்பது ஒரு கலை. அதை அவர் சிறப்பாகச் செய்தார்.
வாழ்க்கையைப் போகும்போக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய நபர் ஊர்வசி அம்மா. நான் ரொம்ப நாள் கழித்து மம்மி என அழைத்த நபர், காலில் விழுந்து ஆசி வாங்கிய நபர். சாவித்ரி அம்மா காலில் விழா நினைத்தேன். அது முடியவில்லை. அம்மா காலில் விழுந்துவிட்டேன். எங்கள் வாழ்க்கை எல்லாம் நன்றாக இருக்கக் காரணம் உங்களால்தான். பாண்டிராஜை ஒரு நிகழ்வில் நான் சந்தித்தேன். அப்போது அவனுக்கு என்னைப் பார்த்தாலே பிடிக்காது. ஆனால், என்னுடன் பழக ஆரம்பித்த பிறகு, ’இந்த ஆள் நல்லவன்தான் போலயே’ எனப் புரிந்துகொண்டு, ’சார்.. நீங்க நல்லவர் சார்’ என்றான். அப்படிதான் நாங்கள் நெருக்கமானோம். இதுபோல விஜய் சேதுபதியுடன் இவனை ஒரு சந்திப்பு செய்ய வைத்து உருவானதுதான் ’தலைவன் தலைவி’. இந்தப் படமும் அப்படி பெரிய ஹிட் படமாக அமையும் என நம்புகிறேன்" என்றார்.

