"வெற்றியாளர்களை விட, தோல்வியடைந்தவர்களை அதிகம் கவனிப்பேன்!" - ஏ ஆர் ரஹ்மான் | A R Rahman
ஏ ஆர் ரஹ்மான், வெற்றியாளர்களைவிட தோல்வியடைந்தவர்களை அதிகம் கவனிப்பேன் என்கிறார். அவர், ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். நரேஷ் ஐயர் போன்றவர்களை, தோல்வி பெற்றபின் அழைத்து பாட வாய்ப்பு வழங்கினார். இதனால், அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது அவரது இசை கச்சேரி முன்னோட்ட பேட்டியில் வெளிப்பட்டது.
இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரது இசை கச்சேரி சென்னையில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு புரமோஷன் நிகழ்வாக சில பேட்டிகளை அளித்து வருகிறார் ஏ ஆர் ரஹ்மான். அப்படி அவர் ஒரு பேட்டியில் தோல்வியாளர்களை கவனிக்க வேண்டியது பற்றி பேசியது பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த பேட்டியில் ரஹ்மானிடம் நீங்கள் யாருடைய ரசிகர் எனக் கேட்கப்பட "நான் நிறைய பேருக்கு ரசிகன். எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு என்பது. மேலும் பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். சில சமயம் நன்றாக பாடும் நபர்களை ஸ்ருதியில் பாடவில்லை என விட்டுவிடுவார்கள். அவர்களை சில வருடங்கள் கழித்து அழைத்து பாட வைக்கலாம், அவர்களும் தங்களை மேம்படுத்தி இருப்பார்கள்.
வெற்றியாளர்களைவிட எனக்கு, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் கூட அப்படித்தான். 33 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது. அவரை அழைத்து `நீ தோற்று விட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா' என்றேன். அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo - Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது." என்றார்.

