" 'மௌன கீதங்கள்' படத்துக்கு சென்சாரில்.." - பாக்யராஜ் சொன்ன சம்பவம் | K. Bhagyaraj
ரவி மரியா, அக்சரா விஜய், ராதாரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு எனப் பலரும் நடித்து ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மக்கள் தலைவா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "எந்தப் பூவின் வாசமும் காற்று எந்தத் திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில்தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர்திசையில்கூட வாசம் வீசும். அது என்னவென்றால், ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும், பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.
இங்கு சென்சார் பிரச்னையைப் பற்றிப் பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால்.. சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். 'மௌன கீதங்கள்' படத்தில் ஒரு காட்சி இடம்பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். ’இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது?’ என கேள்வி எழுப்பினர். ’இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை’ என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் - மனைவி இடையேதானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன். இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனைப் போராடி இடம்பெறச் செய்யலாம். இந்தப் படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலைச் சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில்தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை. இந்த படம், இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாகதான் இருக்கும். சிரித்துக்கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார்.

