"ரஜினி சார் வில்லனாக நடித்த பட ரீமேக்கில் நான்..." - சின்னி ஜெயந்த் ஃபிளாஷ்பேக் | Chinni Jayanth
சின்னி ஜெயந்த், 'VOWELS – An Atlas of Love' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் வரவேற்பு மற்றும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தார். ரஜினி நடித்த கன்னட படத்தின் ரீமேக்கில் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார். தமிழ் சினிமா புதியவர்களை கைவிடாது என நம்பிக்கை தெரிவித்தார்.
திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘VOWELS – An Atlas of Love’. யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இப்படம் மார்ச் 13 வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சின்னி ஜெயந்த் "இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். தமிழ்நாட்டை நம்பி வந்தால் சக்ஸஸ் தான். நான் நடித்த முதல் படமே கன்னட பட ரீமேக். புட்டண்ணா கனகல் இயக்கிய `கதா சங்கமம்' என்ற கன்னட படத்தில் Munithaayi என்ற பகுதி, அதில் ரஜினி சார் வில்லனாக நடித்தார். அதில் உமேஷ் என்பவர் நடித்த பாத்திரத்தில் தமிழில் (கை கொடுக்கும் கை) நான் நடித்தேன். அந்த படத்தின் முதல் காட்சியை இதே கமலா தியேட்டரில் தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது.
இந்தப் படத்தில் ஐந்து கதைகள் உள்ளது, அதில் ஒரு கதையில் நான் நடித்துள்ளேன். நான் இந்த பட தயாரிப்பாளர்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க வேண்டும். 5 கதைகளை விரிவாக எடுக்க வேண்டும். பஞ்ச பூதம் என்பார்களே அதை போல ஐந்தையும் எடுத்தால் தான் இந்தப் படம் நிறைவாக இருக்கும். இந்தப் படத்தில் காதலை பற்றி பேசியிருப்பது போல, மற்ற படங்களை வெவ்வேறு விஷயங்கள் பற்றி பேச வேண்டும். ஆனால் அதில் ஒரு வேண்டுகோள் இதே நடிகர்களை வைத்து எடுக்க வேண்டும். உலக ரசிகர்களில் தமிழ்நாட்டு ரசிகர்கள் போல் வரவே வராது. மிக சரியாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் 'என்டர் தி டிராகன்' படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது. எனவே தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த ஐந்து இயக்குநர்களின் ஒற்றுமை.
இந்த தலைமுறை நடிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். 1980களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம். நடிக்க சான்ஸ் கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டே இருக்கலாம். நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். இப்போது, நடிக்க வாய்ப்பு டக்கென கிடைக்கிறது. தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பது கஷ்டம். தொடர்ந்து நடிக்க, ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது." என்றார்.

