"லப்பர் பந்து படத்துக்கு ஏன் நோ சொன்னேன் என்றால்.." - எஸ்ஜே சூர்யா சொன்ன காரணம் | S J Suryah | LIK
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK'. இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "பிரதீப் ரங்கநாதன் சாருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். அவர் அந்த ஆடியோ லான்சில் என்னைச் சந்தித்தது பற்றி கூறி இருப்பார். ’5 ஸ்டார் ஹோட்டலுக்கு முதன்முதலில் போனதே எஸ்.ஜே.சூர்யா சாரை பார்க்கத்தான்’ என்று சொன்ன மனிதர், இன்று 100 கோடி பிசினஸ் உள்ளவராக வளர்த்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு இறைவனின் ஆசிர்வாதம் இருந்தால் நடக்கும். நான் அவரை நினைத்து மிகவும் மகிழ்கிறேன்.
நான் எப்போதும் மனதில் பட்டதைச் சொல்வேன். ஓர் இயக்குநர் என்னிடம் வந்து நான்தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார். நான் சில மாற்றங்கள் சொன்னேன், அதைச் செய்தார். மீண்டும் மாற்றம் சொன்னேன், அதையும் செய்தார். பின்னர் நானே அவரிடம், ’எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதை நோக்கிப் போகிறேன். நான்தான் வேண்டும் எனச் சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள். நான் இல்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் இந்தப் படத்தை எடுங்கள்’ என மனதில் பட்டத்தை சொல்லி அனுப்பினேன், அந்தப் படம் வெளியாகி பெரிய ஹிட்டானது.
அந்தப் படம்தான் `லப்பர் பந்து'. ஒருவேளை நான் சுயநலமாக முடிவு செய்திருந்தால், அதற்குள் சில திருத்தங்கள் சொல்லி படத்தில் நான் நடித்திருக்க முடியும். ஆனால், எனக்குள் இருக்கும் சில விஷயங்கள் அதனை அனுமதிக்கவில்லை. அதேபோலதான் பிரதீப் சாரை நான் சந்திக்கும்போது அவர் நடித்துக் காட்டியதை பார்த்து, ’நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், பெரிய இடத்துக்குப் போவீர்கள். நீங்களே நடிக்கலாமே’ எனச் சொல்லி இருக்கிறேன்.
அவர் ’மான்ஸ்டர்’ பட லொகேஷன் வந்தது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இதைச் சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதைச் சொல்லி ஒரு 7 வருடத்திற்குள் ஒரு மனிதன் ஸீரோ - ஹீரோ ஆகிறான் என்றால், இது எவ்வளவு பெரிய கடவுள் ஆசிர்வாதம்” என்றார்.

