25 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன முதல் `ஆக்ஷன்' - கௌதம் மேனன் நெகிழ்ச்சிப் பதிவு | Minnale | GVM
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ள கௌதமின் முதல் படம் மாதவன் நடித்த `மின்னலே'. இந்தப் படம் 2001 பிப்ரவரி 1ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டோடு 25 வருடங்களை நிறைவு செய்கிறார் இயக்குநர் கௌதம் மேனன். அதற்கான ஒரு நன்றிக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கௌதம்.
அந்தக் குறிப்பில், "சினிமா என்பது வெறும் அசைவுகளை படம் பிடிப்பது மட்டுமல்ல; அது காலத்தைப் படம் பிடிப்பது என அடிக்கடி கூறப்படுவதுண்டு. நான் `ஆக்ஷன்' என முதன்முதலில் கத்தியது 25 ஆண்டுகளுக்கு முன்பு. இத்தனை காலத்தை நான் கடந்தால் அல்ல, காலம் எனக்கு அளித்த நினைவுகளின் அளவைக் கண்டு உணர்ச்சிமயமாகிறேன்.
இந்த அற்புதமான, உழைப்பைக் கோரும் துறையில் 25 ஆண்டுகள் என்பது ஒரு தனி சாதனை அல்ல. என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையிலிருந்து நெய்யப்பட்ட ஒரு திரைச்சீலை இது. என் சிந்தனையில் தோன்றிய கற்பனை மனிதர்களுக்கு ஓர் ஆன்மா, ஒரு குரல் மற்றும் ஓர் இதயத் துடிப்பைக் கொடுத்த நடிகர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தீர்கள், கதாபாத்திரங்களில் நான்ஒகூட உணராத ஆழங்களைக் கண்டறிந்தீர்கள்.
எனது குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் லென்ஸுக்குப் பின்னால் நின்ற எனது கற்பனையை அமைதியாக வடிவமைத்த கலைஞர்களுக்கு, எனது நன்றியும் மரியாதையும் சினிமா மீது நாங்கள் பகிர்ந்துகொள்ளும் அன்பைப் போலவே ஆழமானவை. நான் ஜாம்பவான்களின் தோள்களில் நிற்கிறேன், சினிமாவின் மாஸ்டர்களின் படைப்புகள் என்னுள் தீப்பொறியைப் பற்றவைத்தன, என் ஆரம்ப காலங்களில் வழிநடத்திய எனது வழிகாட்டிகளுக்கு, எனக்கு வழிகாட்டியதற்கு நன்றி. என் சமகாலத்தவர்களுக்கும் சக இயக்குநர்களுக்கும், உங்கள் பணி எனக்கு தினமும் சவால்களையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. கதை சொல்லும் இந்தப் பகிரப்பட்ட முயற்சியில் நாம் பகிர்ந்துகொள்ளும் தோழமை விலை மதிப்பற்றது.
இறுதியாக, என் அன்பான பார்வையாளர்களுக்கு. நீங்கள் என் கதைகளை உங்கள் வாழ்க்கையில் வரவேற்றுள்ளீர்கள், என் கதாபாத்திரங்கள் உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்துள்ளீர்கள், நான் சித்தரிக்க முயற்சித்த காதல், மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் மாறுபட்ட நிழல்களைத் தழுவியுள்ளீர்கள். உங்கள் வரவேற்புதான் இறுதி வெகுமதி. சினிமா மீதான என் காதல் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது..." எனக் குறிப்பிட்டுள்ளார்.

