"ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு" - விஜய் சேதுபதி | Kaattaan | Vijay Sethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் M. மணிகண்டன், B. அஜித் குமார் இணைந்து இயக்கி வெளியான சீரிஸ் `முத்து என்கிற காட்டான்'. ஜியோ ஹாட்ஸ்டார் மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறுகிறது குழு. இக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்வினில் விஜய் சேதுபதி பேசியதாவது "இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கணும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்றுவிட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.
இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார். இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். கதை நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார். இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி." என்றார்.
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது "விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது. இந்தக் கதையில் என் கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த குழுவில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித்குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.
அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!" என்றார்.
நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது “நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி.
இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது. இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.
நடிகை பார்வதி பேசியதாவது “நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட் இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது.
இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி. இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி." என்றார்.

