அடுத்த படத்தை துவங்கிய சமந்தா! | Samantha | Maa Inti Bangaram
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகள் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 2023ல் தெலுங்கில் வந்த `குஷி'. அதன் பின் தெலுங்கில் அவரது தயாரிப்பில் உருவாகி இந்த ஆண்டு வெளியான `சுபம்' படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார்.
இப்போது தான் அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார் சமந்தா. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் Q&A அமர்வை நடத்திய சமந்தாவிடம், ஒரு ரசிகர் அடுத்து எப்போது தெலுங்கு படத்தில் நடிப்பீர்கள் எனக் கேட்க, "ஒருவழியாக இந்த கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் உள்ளது. `மா இன்ட்டி பங்காரம்' இம்மாதம் துவங்குகிறது" என பதிலளித்தார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பிறந்தநாளன்று, தன் அடுத்த படம் `மா இன்ட்டி பங்காரம்' எனவும், இப்படத்தை தன் தயாரிப்பு நிறுவனமான Trilala Moving Pictures தயாரிக்கிறது எனவும் அறிவித்தார். அதன் பிறகு அப்படம் பற்றிய எந்த தகவலும் வராமல் இருந்தது. இப்போது அந்தப் படம் இம்மாதம் துவங்கும் என அறிவித்துள்ளார் சமந்தா.
இப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை `ஃபேமிலிமேன்' இயக்குநர்கள் ராஜ் & டிகே எழுத, சமந்தாவின் தோழியும், இயக்குநருமான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் மும்பையில் புது வீடு வாங்கி குடியேறிய சமந்தா, தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்கு திரும்பியுள்ளார். இதற்கு அடுத்தாக ராஜ் & டிகே இயக்கத்தில் `Rakt Brahmand: The Bloody Kingdom' என்ற வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் சமந்தா.