"ஹீரோயின் படம் யார் பார்ப்பாங்கனு கேட்டாங்க.." - மாஸ் ஹிட் கொடுத்த சமந்தா பதிவு | Samantha
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. உடல்நல பிரச்னைகள் காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தவர், தற்போது மீண்டும் திரைப்படங்கள்/சீரிஸ் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் தயாரிப்பில் உருவான தெலுங்குப் படம் ‘மா இன்டி பங்காரம்’. இந்தப் படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றி குறித்து நடிகை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுந்தியிருந்தார். அதில், ``'மா இண்டி பங்காரம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். மக்கள் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுகிறார்களா? நாங்கள் வெளியிடும் போஸ்டர்களும் டீசர்களும் மக்களைச் சென்றடைகிறதா? இப்படி ஒரு படம் வருவது அவர்களுக்குத் தெரியுமா?
அப்போது என் நண்பர் ஒருவர், 'பி' சென்டர் (B centre) திரையரங்கு உரிமையாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினார். நான் அதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அது அவருக்குத் தெரியாது. என் நண்பர் அவரிடம், `மா இண்டி பங்காரம் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதல் நாள் வசூல் எந்தளவுக்கு இருக்கும்?' என்று கேட்டார். அந்தத் திரையரங்கு உரிமையாளர் சற்றும் யோசிக்காமல், `ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை யாராவது பார்ப்பாங்களா? அவங்க ஒரு பெரிய ஹீரோவோட படத்துல நடிச்சா பரவாயில்லை, கிளாமருக்காக மக்கள் பார்ப்பாங்க. ஆனா, ஒரு ஹீரோயினே முதன்மைப் பாத்திரத்துல நடிக்கும் படத்தை யார் பார்க்க வருவா? யாரும் வரமாட்டாங்க' என்றார். படம் வெளியாவதற்கு முன்பு இருந்த பொதுவான பிம்பம் இதுதான்.
யாராவது ஒருவர் துணிந்து ரிஸ்க் எடுக்க முன்வரும்போதுதான் உண்மையான மாற்றம் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அந்த முயற்சிகள் பலன் தருவதில்லை. ஆனால், எப்போதாவது ஒருமுறை அந்த முயற்சி ஜெயித்துவிடும். எங்களைப் பொறுத்தவரை, இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. இது இன்னும் பெரிய மாற்றங்களுக்கான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இனிவரும் காலங்களில், யாராவது ஒரு 'பி' அல்லது 'சி' சென்டர் திரையரங்கு உரிமையாளரைத் தொடர்புகொண்டு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் பற்றிக் கேட்டால், அவர்களின் பதில் உடனடியாக 'முடியாது/யாரும் வரமாட்டாங்க' என்பதாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை, அவர்களின் பதில், ’பொறுத்திருந்து பார்ப்போம்’ என்பதாக மாறலாம். ஏனென்றால், சூழல் எப்படி இருக்கும் என்று நமக்கு முன்கூட்டியே தெரியாதல்லவா..." எனப் பதிவிட்டிருக்கிறார்.

