கிளாசிக் இந்தி படங்களின் ஸ்டைலில் `நிஷாஞ்சி' ; அப்படி என்ன ஸ்பெஷல்? | Anurag Kashyap|Nishaanchi
இந்திய சினிமாவில் கவனிக்கத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது இவர் இயக்கியுள்ள புதிய படம் `நிஷாஞ்சி' செப்டம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் பிரமுகரான பால் தாக்ரேவின் பேரன் ஆயிஷ்வர்ய் தாக்கரே இப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரத்தில் வசிக்கும் பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட, ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது இப்படம். இப்படம் பற்றி இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறும் போது, "நிஷாஞ்சி பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப்படத்தை தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வை சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது." எனக் கூறியுள்ளார்.
படத்தின் நாயகன் ஆயிஷ்வர்ய் தாக்கரே கூறும்போது, "இது என் மனதுக்கு நெருக்கமான படம். இது என் முதல் படம் என்பதற்காக மட்டுமல்ல, பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களாக நடிப்பதன் மூலம் என் நடிப்பின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் இது முக்கியமான படம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாக நடிப்பதில் மனதாலும் உடலாலும் பல சவால்களை சந்தித்தேன். அதேசமயம், படத்தின் இசையிலும் பங்களித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.
நடிகை வேதிகா பின்டோ கூறும் போது, "அனுராக் சார் எப்போதுமே என் விருப்பப்பட்டியலில் இருந்தவர். அவர் இயகத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு நனவாகியது. இந்த படத்தில் நான் நடித்த ரங்கேலி ரிங்கூ முதல் பார்வையில் மென்மையான, இனிமையானவளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் வலிமையான, துணிச்சலானவளாக இருக்கிறாள். அதை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆயிஷ்வர்யுடன் இணைந்து பணிபுரிந்ததும் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது." என்றார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் பட், சன்னி லியோன் நடித்துள்ள `Kennedy', பாபி தியோல் நடித்துள்ள `Bandar' ஆகிய படங்களும் அனுராக் காஷ்யப் இயக்கி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.