PARANDHU PO | வாத்து முட்டையில் டைனோசர் வர வேண்டுமா..?
PARANDHU PO(3.5 / 5)
கோகுலின் வாழ்க்கை என்பது வாத்து முட்டையிலிருந்து டைனோசர் வர வேண்டும் என ஓடும் சாதாரண மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வு. கோகுலின் மனைவி க்ளோரியும் சேலை விற்பனை செய்து டைனோசர் உருவாக்கும் முயற்சியில் கணவருக்கு துணை நிற்கிறார். பெற்றோர்கள் படாதபாடு பட்டு வெளியே சுற்றினால், பிள்ளைகள் என்ன செய்ய முடியும். ’மொபைலும் லேப்டாப்பும் முன்னறி தெய்வம்’ என்றே தன் விடுமுறை நாட்களைக் கழிக்கிறான் அன்பு. அன்புவின் கிரஷ் ஜென்னா.
வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்பு, ஒரு நாள் கோகுலுடன் வெளியே செல்ல, நூல் பிடித்தது போல் இவர்களின் உலகிற்குள் பல நபர்கள் வருகிறார்கள். யார் இவர்கள், இவர்களுக்கும் கோகுலுக்கும் என்ன சம்பந்தம் என்பதாக விரிகிறது பறந்து போ. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், அப்பாவும் பையனும் ரோட் டிரிப் செல்லும் போது நடக்கும் நிகழ்வுகள் எனலாம்.
தமிழில் ரோட் டிரிப் திரைப்படங்கள் என்பது அரிதாக நடப்பது. அன்பே சிவம், பையா போன்ற நல்ல ரோட் டிரிப் படங்களை கழித்துவிட்டோமேயானால், சுத்தமாகவே இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்த வகையில் நல்லதொரு ஃபீல் குட் திரைப்படத்தை தமிழுக்கு தந்ததுக்கு ராமிற்கு நன்றி. வழக்கமான ராம் திரைப்படம் போல் இல்லாத திரைப்படம் என்றே விளம்பரப்படுத்தும் அளவுக்கு பாசிட்டிவிட்டியை படம் நெடுக தூவியிருக்கிறார். இயக்குநர் ராமின் உலகம் அலாதியானது. அது எல்லா மனிதர்களையும் நேர்மறை எண்ணங்களுடன் தவறு செய்ய அறியாத மனிதர்களாகக் காட்டுகிறது. நாம் தான் கோகுலைப் போலவும், க்ளோரியைப் போலவும் பீதியடைந்துவிடுகிறோம். பிறகு, அந்தத் தவற்றுக்கும் வருந்தவும் செய்கிறோம்.
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா படத்தின் பெரும் பலம். கோகுலாக அவர் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரதிபலிக்கிறார். அவர் அடிக்கும் ஒன்லைனர்கள் சிவாவிற்கே உரித்தானவை. க்ளோரியாக கிரேஸ் ஆன்டனி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், நமக்கு பரிட்சயமானது கும்பளங்கி நைட்ஸில் தான். பகத் பாசிலின் அருமை மனைவி கதாபத்திரத்தில் அவ்வளவு க்யூட்டாக இருப்பார். Boy Next Door போல் , இந்த குடும்பம் Family Next Door. அவ்வளவு யதார்த்தமாக நம்மைப் போலவே எட்டாத முடியாத இலக்கை எட்டிப்பிடிக்க ஓடிக்கொண்டிருப்பவர்கள். அதனாலேயே சிவாவும், கிரேஸும் அவ்வளவு எளிதாக பொருந்திப்போகிறார்கள். ஒருவரைத் தவறாக நினைத்துவிட்டு, அதற்கு வருந்தும் காட்சியாகட்டும்; ஆனது ஆகட்டும் என நடனம் ஆடுவதாகட்டும் கிரேஸ் நடிப்பில் மாயாஜாலங்கள் செய்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் அஞ்சலி, அஜு வர்கீஸ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி, விஜய் யேசுதாஸ் என பலர் படத்தில் வருகிறார்கள். அஞ்சலி மட்டும் மனதோடு தங்கிவிடுகிறார். என்றாவது ஒரு நாள், நம்மை கிரஷைப் பார்த்தால் என்ன என்னவெல்லாம் பேசுவோமோ, அதையெல்லாம் அஞ்சலியிடம் தான் கொட்டித் தீர்த்துவிட்டு வர வேண்டும். அப்படியானதொரு அழகிய கதாபாத்திரம். ராமின் படங்களில் அஞ்சலி எப்போதும் கூடுதல் அழகு. இதிலும் அப்படித்தான்.
யுவன் இல்லாத ராமின் திரைப்படம். படமே ஒரு மியூஸிக்கல் என்னும் அளவுக்கு பாடல்களால் நிறைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியும், பாடலாசிரியர் மதன் கார்க்கியும். தான் இல்லாமல் ராமின் படம் இல்லை என்பதால், பின்னணி இசையை மட்டும் கவனித்திருக்கிறார். படத்தின் கதையையொட்டியே பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் புதிய முயற்சி தான் என்றாலும், எமோசனல் காட்சிகளிலும் ஜிங்கிள் பெல்ஸ் போல் சட்டென பாடலுக்குள் போய்விடுவது கொஞ்சம் செட் ஆகவில்லை.
Larger than life திரைப்படங்கள் என்பார்களே. மாஸ் கமர்ஷியல் சினிமாக்களை பார்த்துப் பழகியதால், light hearted திரைப்படமாக விரியும் பறந்து போ, நமக்கு ஃபேன்டஸி படத்துகான உணர்வைக் கூட தரலாம். ஆனால், நாம் எல்லோருமே வாத்து முட்டைகளுடன் டைனோசருக்குக் காத்திருக்கும் கோகுலும், கிரேஸூம் என்பதால், நிச்சயம் இந்தப் படத்தினைப் பார்க்கலாம். அடுத்த நொடி நிச்சயமற்ற வாழ்வில், பர பரவென ஓடிக்கொண்டிருக்கும் உலகில் கொஞ்சம் இளைபாற பறந்து போ பார்க்கவும்.