ஜாலியான காமெடி படமாக கவர்ந்ததா ’அன்பே டயானா’? | Anbe Diana Review | Pari Elavazhagan
ஜாலியான காமெடி படமாக கவர்ந்ததா அன்பே டயானா?(2 / 5)
இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்... காதலா, குடும்பமா என தடுமாறும் இளைஞனின் கதையே `அன்பே டயானா'
கிருஷ்ணா (பாரி) கட்டுப்பாடான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். சொந்த சாதியிலதான் திருமணம் செய்ய வேண்டும் என கறார் காட்டுகிறார் அவரது அம்மா சரளா (ரோஜா). ஆனாலும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக்கை (ரம்யா ரங்கநாதன்) ஒரு தலையாகக் காதலிக்கிறார் கிருஷ்ணா. வருடக்கணக்கில் அலையவிட்டாலும் ஒருவழியாக கிருஷ்ணா காதலுக்கு ஓகே சொல்கிறார், மேஜிக்.
அதேசமயத்தில், கிருஷ்ணாவுக்கு மாமா மகளுடன் நிச்சயதார்த்தம் ஆகிறது. காதலுக்கு மரியாதை செய்து மேஜிக்கை கைப்பிடித்தாரா? தாய் சொல்மிக்க மந்திரம் இல்லை என மாமா மகளை மணம் முடித்தாரா என்பதைச் சொல்கிறது `அன்பே டயானா'.
ஜாலியான ஒரு படத்தை கலர் ஃபுல்லா கொடுக்க முயற்சி செய்து, அதில் பாதி கிணறும் தாண்டி இருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். தேவையான இடங்களில் காமெடி சிறப்பாக ஒர்க் ஆகிறது.
ஹீரோ பாரி முடிஞ்ச அளவு தயக்கமுள்ள ஓர் இளைஞன் பாத்திரத்தை நன்றாகக் கொடுத்திருக்கார். படத்தில் மாஸ் காட்டுவது சரளாவாக வரும் ரோஜாதான். கெத்தான குடும்பத் தலைவியாக எல்லோரையும் மிரட்டி உருட்டுவது, பஞ்சாயத்தில் எல்லோரையும் ஓடவிடுவது என அசத்துகிறார். குடித்துவிட்டு அலம்பல் செய்வது, போதை தெளிந்து பம்முவது, குருட்டுத் தைரியத்தில் கோபமாகப் பேசுவது என சேத்தனும் தன் பங்குக்கு அசத்துகிறார். கோபி, பெங்களுர் தமிழில் பேசி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இவர்களைத் தவிர செல் முருகன், நிகிலா சங்கர், சுதர்சன் காந்தி, இஸ்மத் பானு போன்றோரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் இரண்டாம் பாதிதான் படத்துக்குப் பெரிய பலம். அதிலும், க்ளைமாக்ஸில் 20 நிமிஷம் செம பிளாஸ்ட் காமெடிகள். அதேசமயம் ஜாலியான படத்துக்கு நடுவில் சாதிக்கு எதிரான கருத்தைப் பேசியிருந்த விதமும், மனிதர்கள்தான் முக்கியம் எனச் சொன்னதும் பாராட்ட வேண்டியது. பரத் ஷங்கர் இசையில் தொடுவானத்தில் பாடல் ரசிக்க வைக்கிறது, பின்னணி இசை படத்துக்குத் துள்ளலைக் கூட்டுகிறது. ஷெல்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு கலர்ஃபுல் வைப் சேர்க்கிறது.
இந்தப் படத்தின் குறைகள் என எடுத்துக் கொண்டால், முதலில் சொல்ல வேண்டியது படத்தின் முதல் பாதியைத்தான். ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகம் செய்து, கதைக்குள் நுழையவே நெடுநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் படத்தின் முதல் பாதி பெரிய சுவாரசியம் எதுவும் இல்லாமல் ட்ரையாக நகர்கிறது.
படம் on track வரவே இரண்டாம் பாதி ஆகிறது. படத்தில் பேசப்படும் இரண்டு முக்கியமான விஷயங்கள் காதல், குடும்பம். ஆனால் இரண்டிலும் எந்த எமோஷனல் கனெக்ட்டும் வலுவாக இல்லை. விழுந்து விழுந்து காதலிக்கும் பெண்ணை, வீட்டில் சின்ன எதிர்ப்பு என்றதும் கைவிட நினைக்கிறார் என்பதால் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதா, காமெடியாக எடுப்பதா என கேள்வி எழுகிறது. மேலும், அம்மாவை வைத்து வரக்கூடிய எமோஷனல் கோணமும் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் இரண்டாம் பாதி போலவே, முதல் பாதியிலும் நிறைய காமெடிகள் சிரிக்க வைத்திருந்தால் நல்ல கொண்டாட்டமாக இருந்திருக்கும் இந்த ’அன்பே டயானா’.

