நடிகை மியா ஜார்ஜ் திருமணம்: கேரள தொழிலதிபரை மணந்தார்
நடிகர் சசிகுமார், விஷ்னு விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்த முன்னணி நடிகை மியா ஜார்ஜ் கேரள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆர்யாவின் தம்பி சத்யா நடிகராக அறிமுகமான ‘அமரகாவியம்’ படத்தில் தமிழில் ஹீரோயினாக கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார் மியா ராஜ். பள்ளி மாணவியாக வந்து தமிழக மக்களை கொள்ளை கொண்டார். அப்படத்தில் வரும் ‘மெளனம் பேசும்’ பாடல் இன்றும் பலரது ப்ளேல் லிஸ்டில் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
அதேபோல, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ’காதலே காதலே’ பாடல் பலரது காலர் டியூன்களாக உள்ளன. இந்தப் பாடல்களில் மியாவின் க்யூட் எக்ஸ்ப்ரெஷன்கள் ரசிக்க வைக்கும். சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படத்திலும் நடித்தவர், விஜய் ஆண்டனியின் எமன் படத்திலும் ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில், இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கு கடந்த ஜூன் 2 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், கொரோனா சூழல் என்பதால் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் எளிமையாக கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் முடிந்திருக்கிறது. இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.