
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 12 நாட்களில் சர்வதேச அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான வெற்றி விழாவை நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியாகி அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனை அடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு காவல்துறை பதில் கடிதம் அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றே நேற்று வரை சொல்லப்பட்டு வந்தது. இதனை அடுத்து காவல்துறை லியோ வெற்றி விழா நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் நாளை நடைபெறும் லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை போன்ற மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் லியோ வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட தலைவர்கள், மாநகர, நகர, வட்ட, வார்டு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் என 6ஆயிரம் பேர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் மாவட்ட தலைவர் மூலம் ஆதார் அட்டை மற்றும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் அட்டை கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும். விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வரும் போது உறுப்பினர் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும், சரி பார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் அல்லாத ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய்யின் 'லியோ' பட வெற்றி விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்படி நண்பா..! லியோவின் மன்னிக்கவும் பார்த்திபனின் மொத்த குடும்பமும், மொத்த படக்குழுவும் வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பின் குறிப்பாக இந்தவாட்டி மிஸ் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.