"எனக்கு முன் என் அம்மாவுக்கு திருமணம்.." பிரபல நடிகை மகளின் பதில் | Surekha Vani | Supritha
தெலுங்கு சினிமாவின் குறிப்பிடத்தகுந்த குணச்சித்திர நடிகை சுரேகா வாணி. தொலைக்காட்சி தொகுப்பாளராக பயணத்தை துவங்கியவருக்கு, சுரேஷ் தேஜா உடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் இயக்கிய பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் சுரேகா. அந்த பிரபலத்தின் மூலம் பல தெலுங்கு படங்களில் நடிக்கவும் செய்தார். தமிழில் கூட `உத்தமபுத்திரன்', `காதலில் சொதப்புவது எப்படி', `தெய்வத்திருமகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2019இல் கணவர் சுரேஷ் தேஜா இறந்த பிறகு சினிமாவிலிருந்து மெல்லமெல்ல விலகி இருந்தவர், இப்போது படங்களில் அதிகம் நடிப்பதில்லை.
சுரேகாவின் மகள் சுப்ரிதா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள தெலுங்கு படம் `Amaravathiki Aahwanam'. இப்படத்தின் பேட்டிகளின்போது அவர் சொன்ன பதில் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. தன் அம்மாவுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவது பற்றி அவரிடம் கேட்கப்பட, "என் அம்மாவிடம், [நேற்றுகூட இந்த வருடமே உங்களுக்கு திருமணம் செய்துவிடலாம்[ எனக் கூறினேன். ஆனால், ஏனோ அவருக்கு என் அப்பாவுக்கு பிறகு வேறு யாரும் வேண்டாம், அந்த இடத்தை வேறு யாருக்கும் தரக் கூடாது என நினைக்கிறார். அதை நானும் மதிக்கிறேன். ஆனாலும் என் திருமணம் நடக்கும் முன்னர், என் அம்மாவுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
என் சொந்தக்காரர்களிடம்கூட இதுபற்றி பேசிவிட்டேன், அவர்களுக்கும் இதில் சம்மதமே. அம்மாவை, மிக அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவரின் விருப்பங்களை மதிக்க வேண்டும், அப்படியான ஒருவர்தான் அம்மாவுக்கு சரியாக இருப்பார். ஆனால், இது என்னுடைய முடிவு மட்டுமில்லையே, அவருடைய விருப்பமும் மகிழ்ச்சியும்தான் பிரதானம்" என்றார் சுப்ரிதா.

