"சினிமா மீதான எனது காதல்..." - Tom Cruiseன் ஆஸ்கர் ஏற்புரை | Oscar
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது முதல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இதற்கு முன்பு சிறந்த நடிகருக்காக `Born on the Fourth of July', `Jerry Maguire', சிறந்த துணை நடிகருக்காக `Magnolia' மற்றும் சிறந்த படம் `Top Gun: Maverick' என நான்குமுறை ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியிருந்தும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த சூழலில் தனது 62-ம் வயதில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பல ஆண்டுகள் திரையுலகிற்கு செய்த சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு அகாடமியின் கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை டாம் க்ரூஸுக்கு இயக்குநர் Alejandro Iñárritu வழங்கினார். இந்த நிகழ்வில் கலை இயக்குநர் வின் தாமஸ் (Wynn Thomas), நடன கலைஞர் டெபி ஆலன் (Debbie Allen) ஆகியோருக்கும் கௌரவ ஆஸ்கரும் பாடகி டாலி பார்டனுக்கு (Dolly Parton) Jean Hersholt Humanitarian விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய டாம் க்ரூஸ் "நன்றி Alejandro, உங்களுடைய வருகை எனக்கு பெரிய விஷயம். 25 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய Amores Perros பார்த்து வியந்தோம். அதிலிருந்து உங்களின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து வருகிறேன். நீங்கள் சாதாரணமான ஆள், உங்களின் பணிகள் அழகானவை. அவை மிகவும் உண்மையான, மனிதத் தன்மையுள்ளவை. உங்களுடன் பணியாற்றமுடிந்தது, என் திரைப்பயணத்தில் மிக சிறந்த ஒரு விஷயம். அடுத்த ஆண்டு இப்படத்தில் (Judy) இவர் என்ன செய்திருக்கிறார் என்பதை உங்கள் அனைவருக்கும் காட்ட, ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இதே மேடையில், கௌரவம் அளிக்கப்பட்டுள்ள இன்னொரு நபர் பற்றியும் பேச நினைக்கிறேன், வின் தாமஸ் (Wynn Thomas). நீங்கள் நியூயார்க் நாடக மேடைகளில் உங்கள் பயணத்தை துவங்கினீர்கள். நான் இதை உங்களிடம் கூறியதில்லை. நீங்கள் ஸ்பைக் லீயுடன் இணைந்து செய்த `She's Gotta Have It' படத்தை 1986, ஆகஸ்ட் 8ம் தேதி நியூயார்க், பிளீக்கர் ஸ்ட்ரீட் திரையரங்கில் முதல் காட்சி பார்த்தேன். அது திரைத்துறையில் முக்கியமான அத்தியாயத்தை துவங்கியது. நீங்கள் மிக முக்கியமான கலை இயக்குநர். அமெரிக்க கலாச்சாரத்தை உயர்த்தியதில் உங்கள் பங்கும் முக்கியமானது. நீங்கள் எங்ககளுக்கு ஒரு முன்மாதிரி.
டாலி பார்டன் (Dolly Parton) நீங்கள் சிறந்த அமெரிக்க பாடகி. உங்களுடைய பணிகள் சிறப்பானவை. நீங்கள் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் கருணையும், கலையும் வேறு வேறு என பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டையும் ஒன்றாக எரியும் ஒரு ஒளியாக பார்த்தீர்கள்.
டெபி ஆலன் (Debbie Allen) நீங்கள் ஒரு ராணி. திரையுலகில் உங்களுடைய தாக்கம் முக்கியமானது. நீங்கள் ஒரு நடிகர், நடன கலைஞர், நடன வடிவமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் தாண்டி, வாழ்க்கையில் ஒரு முறையே நிகழும், கலை உணர்ச்சி. பல இளம் கலைஞர்களுக்கு தங்கள் குரலை காண, ஒழுக்கத்தை கடைபிடிக்க தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கதவை நீங்கள் திறந்து வைத்தீர்கள். உங்கள் அம்மா விவியன் எழுதியதை போல, நீங்கள் தைரியமாகவும், அழகாகவும் மற்றும் சுதந்திரமாகவும் இருங்கள். இங்குள்ள ஒவ்வொரு கலைஞர்களையும் நான் மதிக்கிறேன். நீங்கள் எனக்கு புதுப்புது சவால்களை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள், உங்களுடன் இந்த மாலையை செலவிடுவதால் மகிழ்ச்சி.
சினிமா மீதான எனது காதல் மிகச் சிறிய வயதிலேயே தொடங்கியது, எனக்கு நினைவு தெரிந்தவரை, நான் ஒரு சிறுவனாக, இருண்ட தியேட்டரில் எனக்குப் பின்னால் இருந்து வரும் ஒளிக்கீற்று, அறையின் குறுக்காக சென்று திரையில் வெடிப்பது போன்ற தோற்றத்தை பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. திடீரென இந்த உலகம் எனக்கு தெரிந்த அளவை விட, மிகப்பெரியதாக ஆனது. கலாச்சாரங்கள், வாழ்க்கை, நிலம் என பலதும் என் முன்பு விரிந்தன. அது எனக்குள் ஒரு பொறியை உண்டாக்கியது. அது சாகசத்திற்கான பசி, அறிவுக்கான பசி, மனிதகுலத்தைப் புரிந்துகொள்ளும் பசி, கதாபாத்திரங்களை உருவாக்குதல், ஒரு கதையைச் சொல்லுதல் மூலம் உலகைப் பார்ப்பது போன்ற பசியைத் தூண்டியது. அது என் கண்களைத் திறந்தது. என் வாழ்வில் உணர்ந்த எல்லைகளை, என் கற்பனையின் மூலம் நீட்டிக்க முடியும் என்ற சாத்தியம் தெரிந்தது. அந்த ஒளிக்கற்றை உலகைத் திறக்கும் விருப்பத்தைத் உண்டாக்கியது, அன்றிலிருந்து நான் அதைப் பின்பற்றி வருகிறேன். ஒரு சிறுவனாக இருந்த போது திரையரங்க டிக்கெட் எடுக்க பல வேலைகளை செய்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு வேலை போதிய பணம் இல்லை என்றால், அதற்கான வேறு வழிகளையும் கண்டறிந்தேன்.
சினிமா, என்னை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றது. அது வேறுபாடுகளைப் பாராட்டவும் மதிக்கவும் இது எனக்கு உதவுகிறது. இது பகிரப்பட்ட மனிதநேயத்தையும், நாம் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருப்பதையும் எனக்குக் காட்டுகிறது. நாம் எங்கிருந்து வந்தாலும், அந்த தியேட்டரில், நாம் ஒன்றாகச் சிரிக்கிறோம், ஒன்றாக உணர்கிறோம், ஒன்றாக நம்புகிறோம், நாம் ஒன்றாக கனவு காணுகிறோம், அதுதான் இந்தக் கலை வடிவத்தின் சக்தி. அதனால்தான் அது எனக்கு முக்கியமானது. எனவே திரைப்படங்களை உருவாக்குவது நான் என்ன செய்கிறேன் என்பதல்ல, நான் யார் என்பது. மேலும் சினிமா என்பது ஒரு தனிநபரால் உருவாக்கப்படுவதல்ல, அது ஒரு கூட்டு முயற்சி. அந்த அறிவை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் பல கலைஞர்கள் அதில் சம்பந்தப்பட்டவர்கள். நான் நிறைய சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என கற்பனையை வடிவமாகும் பலரிடமிருந்து கற்றேன்.
என் வாழ்க்கையையும் பணியையும் வடிவமைத்த பலர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரின் பெயரையும் என்னால் இங்கு சொல்ல முடியாது. ஆனால் எனக்கான பாதையை அமைத்த அந்த அறிஞர்களுக்கு நன்றி. உங்கள் அனைவரையும் நான் என்னுடன் சுமக்கிறேன். நான் செய்த செய்யப்போகிற ஒவ்வொரு படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தக் கலை வடிவத்துக்கு உதவும் விஷயத்தை நான் தொடர்ந்து செய்வேன் என உங்களுக்கு சொல்கிறேன். புதிய திறமைகளை அடையாளம் காண, சினிமாவை உறுதியாக்கும் இந்த முயற்சியில் இன்னும் சில எலும்புகளையும் நான் உடைத்துக் கொள்வேன். என்னைப் போலவே இப்போது தியேட்டருக்குள் நுழைய முயற்சிக்கும் அந்த சிறுவனுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க என்னால் ஆனா உழைப்பை தொடர்ந்து கொடுப்பேன்" என்றார்.

