”RRR படத்தை இரண்டுமுறை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்!” - ராஜமௌலி | Rajamouli | James Cameron
இந்திய சினிமாவில் மிகப்பிரபலமான இயக்குநர் ராஜமௌலி. இவரின் ’ஈகா’, ’பாகுபலி’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களுக்கு உலகம் முழுக்கவே ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது ராஜமௌலி தனது ’ஈகா’, ’பாகுபலி’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ படங்களின் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளை பிரெஞ்சு ரசிகர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக விளம்பர வேலைகளிலும் தீவிரமாக பிரான்சின் பாரிஸ் நகரில் இருக்கிறார்.
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சமீபத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தியபோது பேசிய ராஜமௌலி, "நான் அமெரிக்காவில் ஜேம்ஸ் கேமரூனைச் சந்தித்தேன். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே என் கண்கள் பிரமித்துப் போயின. அவர் 'RRR' திரைப்படத்தை இரண்டு முறை பார்த்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் படம் எவ்வளவு நன்றாக இருந்தது என்பதைப் பற்றியும் பேசினார். நான் அவரை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததால், என் மனம் எங்கோ செயலிழந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு அச்சமூட்டும் ஒரு தலைப்பான செயற்கை நுண்ணறிவு (AI) குறித்தும் நாங்கள் பேசினோம். செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் திரைப்படத் தயாரிப்பிற்கு மாற்றாக அமையாது என்று அவர் கூறியது எனக்கு ஆறுதலாக இருந்தது" என்று பகிர்ந்துகொண்டார்.

