‘மீசைய முறுக்கு 2’ நிகழ்வு ரத்து: ரசிகர்களிடம் ஹிப்ஹாப் ஆதி வருத்தம்!
பிரபல ராப் பாடகர் ஹிப் ஹாப் ஆதி, 2015இல் சுந்தர் சி இயக்கிய `ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்சியாக `இன்று நேற்று நாளை', `தனி ஒருவன்', `அரண்மனை 2' எனப் பல படங்களில் இசையமைப்பளராக பணியாற்றியவர், 2017ஆம் ஆண்டு `மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். ’மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தச்சூழலில் தான், இப்படத்தின் கொண்டாட்ட நிகழ்வு சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை நடைபெறவிருந்தது. இதில், நடிகரும் ஹிப் ஹாப் கலைஞருமான ஆதி கலந்துகொள்ளவிருந்தார். ஆனால், இந்நிகழ்வில் பங்கேற்க எதிர்பாராதவிதமாக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதையடுத்து இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் காவல்துறையினரும் ரசிகர்களிடம் அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று ரசிகர்களும் அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தசூழலில் தான், ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்து ஹிப்ஹாப் ஆதி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”உங்களை காண்பதற்கு பீனிக்ஸ் மாலில் ஆவலாக காத்திருந்தேன். கூட்டம் அதிகரித்ததால், பாதுகாப்பு காரணங்கள் கருதி, காவல்துறையினர் நிகழ்ச்சியை ரத்து செய்ய கூறினர். அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மன வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பிட்டேன். நிகழ்ச்சிக்காக வந்து காத்திருந்தவர்களுக்கு மிகவும் நன்றி. மற்றுமொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

