ஜனநாயகன் படம் லீக்கானது எப்படி? ’Edit Roomல் நுழைந்து திருட்டு..’ உதவி எடிட்டர் செய்த வேலை!
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசியவிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று முக்கிய குற்றவாளிகளை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் எடிட்டிங் ஸ்டூடியோவிற்குள் அனுமதியின்றி நுழைந்து, முழு படத்தையும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
செய்தியாளர் - விக்னேஷ்
ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக கசியவிட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் மூவரை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே இத்திரைப்படத்தை பதிவேற்றம் செய்து பரப்பியதாக 6 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் மூவர் சிக்கியுள்ளனர். விரிவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முதன்மைக் குற்றவாளி, வேறொரு திரைப்படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றி வருபவர் எனவும், ஜனநாயகன் திரைப்படம் எடிட்டிங் செய்யப்பட்ட ஸ்டுடியோவிற்குள் முறையற்ற வகையில் நுழைந்து, அந்தத் திரைப்படத்தின் காட்சிகளை திருடியது விசாரணையில் தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஜனநாயகன் படம் லீக்கானது எப்படி? என்பது குறித்து விசாரணையில் புதிய தகவல்கள் வெளியானது. ஜனநாயகன் திரைப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஃப்ரிலேன்சர் உதவி எடிட்டர் திருடி பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பார்த்த திரைப்படத்தை நெருங்கிய நண்பர்களுக்குள் சொல்ல, அவர்களுக்கு மட்டும் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த திரைப்படம் பலரிடம் கசிந்து, இணையத்தில் கசிந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எடிட்டிங்கில் இருந்த திரைப்படத்தை முழுவதுமாக காப்பி செய்து சீன்களை ஒட்ட வைத்து ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்துள்ளார் எனவும்,
ஐ.பி முகவரி, டவர் டம்ப் உள்ளிட்டவை வைத்து மூன்று தனிப்படைகள் அமைத்து அதிகாரிகள் எப்படி ஜனநாயகன் படம் வெளியானது என்பதை கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியானதில் அரசியல் இல்லை!
குறிப்பாக அரசியல் சூழ்ச்சி காரணமாக மத்திய அரசை ஆளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் போர்டு பல பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையில் அரசியலுக்கும், படம் லீக்கிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக எடிட்டர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது இந்த படத்தின் லீக் எடிட்டர் மூலமாக வெளியாகவில்லை என விளக்கம் அளித்து இருந்தநிலையில், எடிட்டிங் ஸ்டூடியோவில் உள்ளே புகுந்து ஃப்ரீலான்சராக வேலை பார்க்கும் எடிட்டர் ஒருவர் திருடி படத்தை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதித்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

