”படம்தானே எடுத்தேன்.. இந்த அடி அடிக்கிறீங்க!” - விக்னேஷ் சிவன் | Vignesh Shivan | LIK
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK'. இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் பேசிய விக்னேஷ் சிவன், "இந்தப் படம் வெளியானதே எனக்கு பெரிய ப்ளாக்பஸ்டர்தான். எப்போதுமே கனவுகள் பெரிதாக இருந்தால் சிக்கல்தான். நமக்குச் சுலபமாகக் கிடைப்பதை வைத்துச் செய்தால் எளிமையாக நடக்கும் என்பதால் நம் மனமே அப்படியான விஷயங்களைத்தான் தேடும். நான் ஒரு கம்ஃபர்ட் ஸோனில் இருக்கிறேன். அதற்குள் வரக்கூடிய படங்களை எத்தனை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அதிலிருந்து வெளியேறி, மிக சவாலான ஒரு படத்தைச் செய்ய விரும்பினேன். படத்தை நிறைய பேர் பாராட்டினாலும், சில விமர்சனங்களும் இருக்கிறது. எப்போதும் புதிதாக ஒரு விஷயம் சொல்வதென்றால் அதை எல்லோருக்கும் புரியும்படி கொடுக்க வேண்டும். அப்படி இருக்கையில், சில இடங்கள் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை என்னை மேம்படுத்தும் விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை நான் எடுக்க முதல் காரணம் பிரதீப். அவர் இல்லை என்றால் இந்தப் படம் நடந்திருக்காது. இந்தப் படத்திற்கு பட்ஜெட்தான் பெரிய பிரச்னை. இன்று பல படங்கள் டிராப் ஆகிறது, இயக்குநர்கள் மாற்றப்படுகிறார்கள். இன்று இயக்குநர்களின் சூழல் மிகவும் கடினமானதாக இருக்கிறது. அவ்வளவு பெரிய படம் ஆன்லைனில் லீக் ஆகி இருக்கிறது. அதில் எல்லோருடைய வலியையும்விட இயக்குநரின் வலி அதிகமாக இருக்கும். ஒருநாளும் ஒருயொரு காட்சியையும் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்கள் என்பதையும் எவ்வளவு கனவுகளுடன் எடுப்பார்கள் என்பதையும் ஓர் இயக்குநராக என்னால் உணர முடியும். இந்த நேரத்தில், என் நண்பன் ஹெச் வினோத்துக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இது மரணம் அளவுக்கு வலிக்கக்கூடிய விஷயம். நினைத்ததை நினைத்தபடி கொண்டு சேர்க்கமுடியாமல் போனால் அது பெரிய வலி. ஆனால் முடிந்தவரை நான் நினைத்த படத்தை நினைத்தபடி எடுத்துவிட்டேன். அதற்கு பிரதீப் மிகவும் உறுதுணையாக இருந்தார். குறிப்பாக, அந்த நீச்சல் குளக் காட்சி எல்லாம் மிக சிரமப்பட்டு நடித்தார். ஆனால் அதை வெளிக்காட்டியதே இல்லை. இன்று படத்துக்கு வந்த ஓப்பனிங்கும் அவரால் வந்ததுதான். இந்தப் படமும் உங்களுக்கு ரூ.100 கோடி படமாக மாறும்.
சிலர் படம் பற்றி அப்படி இப்படிச் சொல்கிறார்கள். நான் இருந்த பணம் எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டேன். இப்போதைய தம்நெல் கலாசாரத்தில் ஏதாவது நெகட்டிவாக இருந்தால்தான் பார்க்கிறார்கள். எனவே அதற்கு கன்டென்ட்கூட நானே கொடுக்கிறேன். அதை எல்லாம் சமாளிக்க உங்களால்தான் முடியும். நிறைய செட்டில்மென்ட் பாக்கி இருக்கிறது. ’ராமசாமி என் பணம் கிடைச்சிருக்கு’ என பல பேர் வெளியே இருக்கிறார்கள். இந்த வாரம் நன்றாக ஓட வேண்டும், இல்லை என்றால் ஊஊதான்.
’என்ன பண்ணிட்டான் என் கட்சிக்காரன் ஒரு படம்தானே எடுக்க வந்தான். அவனைப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க’.. சிம்பிளா செய்தால் ’ஒரே மாதிரி செய்கிறேன்’ என்கிறீர்கள். புதுசா செய்தால், அதில் குறை சொல்கிறீர்கள். நான் கேசரி செய்தால் மட்டும், ’ஏன் காரமாக இல்லை’ என்கிறீர்கள். என் சிக்கன் குழம்பு மட்டும் ’ஏன் இனிப்பாக இல்லை’ என்கிறீர்கள். இந்தப் படத்துக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அதுதான் எனக்கு வரும். எனக்கு பயங்கரமான படம் எல்லாம் வராது. அதை ஜாலியா பார்த்து ரசியுங்கள்" என்றார்.

