`லோகா' படத்தில் சர்ச்சையான வசனம்... கர்நாடகாவில் எதிர்ப்பு... மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்!
summary
கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி லோகா சேப்டர் 1: சந்திரா என்ற மலையாள படம் வெளியாகி கேரளா மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பெங்களூர் பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றிருப்பதாக கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்படத்தின் Wayfarer Films என்ற தயாரிப்பு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் படத்திலிருந்து அந்த வசனத்தை நீக்குவதாகவும் அறிவித்துள்ளது
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரிப்பில் டோம்னிக் அருண் இயக்கி கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான படம் `லோகா சேப்டர் 1: சந்திரா'. மின்னல் முரளிக்குப் பிறகு சிறப்பான சூப்பர்ஹீரோ படம் என இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கேரளா மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்து நாட்களில் இந்திய அளவில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மலையாளத்தில் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம் என லோகா பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் மூலம் MCU, DCU போல, Wayfarer Filmsன் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் WCU என்பதை துவங்கியுள்ளனர். லோகா படத்திலேயே சில சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தியும் இருந்தனர்.
ஒரு பக்கம் இப்படியான பாராட்டுகளை பெற்று வரும் லோகா படத்தின் மீது எதிர்ப்பும் எழுந்துள்ளது. படத்தின் கதைக்களம் பெங்களூரில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கதைப்படி நாச்சியப்ப கௌடா என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் நடித்திருந்தார் சாண்டி. பெண்களை மிக மோசமாக கையாளும் பாத்திரமாக இந்த கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. படத்தின் ஒரு காட்சியில் சாண்டி கதாப்பாத்திரத்திற்கு பெண் பார்ப்பது பற்றிய பேச்சு வரும். உடனே, அதற்கு சாண்டியின் கதாப்பாத்திரம் "கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம்தான். ஆனால் பெங்களூர் பெண்கள் மட்டும் வேண்டாம்." எனக் கூறி அவர்கள் மிக மோசமானவர்கள் என சொல்வது போன்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கும்.
இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். கர்நாடகாவையும், கர்நாடக மக்களையும் இப்படம் தவறாக சித்தரிக்கிறது என சர்ச்சை கிளம்பியது. அதனை கண்ட லோகா படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "எங்கள் படத்தின் கதாப்பாத்திரம் பேசும் ஒரு வசனம் எதிர்பாரா விதமாக கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தி இருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எங்களின் Wayfarer Films நிறுவனத்திற்கு மக்களை விட பெரிது எதுவும் இல்லை. இந்த விஷயத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இதனை வேண்டுமென்றே செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம், படத்திலிருந்து அந்த வசனம் உடனடியாக நீக்கப்படும் எனவும் உறுதி கூறுகிறோம். இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு வருந்துகிறோம். கூடவே மிகத் தாழ்மையுடன் உங்கள் மன்னிப்பை கோருகிறோம்." எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இப்படத்தில் இந்து மன்னர்கள் கோவிலுக்கு தீவைத்து போலவும், கிறிஸ்தவர்கள் காக்க வந்தார்கள் போலவும் காட்சி வைக்கப்பட்டுள்ளன என்பனவற்றை முன்வைத்து, இதே லோகா படம் இந்து மக்களுக்கு எதிரான கருத்துகளை சொல்கிறது எனவும் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.