ஈழத்தமிழர்களை அவமதிக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ’கிங்டம்’ ?
இந்நிலையில், படத்திற்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களை அவமதிக்கும் வகையில் காட்சியமைப்புகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஈழத் தமிழர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங்டம் திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிங்டம் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகள் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினர், கிங்டம் திரைப்படத்தை தடை செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர். அதே போன்று, காவல் நிலையங்களிலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ. புரொடெக்சன் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஈழத் தமிழர்களின் பிரச்னைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.