”இந்தி ஊடகங்களுக்கு எதுவும் புரியாது..” - தமிழில் பேச சொன்ன ரசிகர்கள்! ராஷ்மிகா செய்த செயல் வைரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் தனுஷ், இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘குபேரா’. கதாநாயகனாக தனுஷ், நாயகியாக ராஷ்மிகா, முக்கிய ரோலில் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்றுவருகிறது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். அதே நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தமிழில் பேசுமாறு சொன்ன ரசிகர்களை அவர் கையாண்ட விதம் எல்லோரையும் கவர்ந்துள்ளது.
இந்தி ஊடகங்களுக்கு எதுவும் புரியாது..
குபேரா படத்தின் மூன்றாவது தனிப்பாடலான ’பிப்பி பிப்பி டம் டம் டம்’ மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் பேசுவதற்கு முன்னதாக நடிகை ராஷ்மிகா, நாகர்ஜுனா முதலியோர் பேசினர். அப்போது இந்தியில் பேச ஆரம்பித்து நடிகை ராஷ்மிகாவிடம் தமிழில் பேசுமாறு அங்கு வந்திருந்த தமிழ் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது ”தமிழ்ல பேசணுமா, நான் தமிழ்ல பேசுனா இங்க இருக்க இந்தி ஊடகங்கள் என்ன பேசுறாங்க எங்களுக்கு புரியலையே என்று கூறுவார்கள்’ என கூறினார். ஆனால் தொடர்ந்து ரசிகர்கள் தமிழில் பேசுமாறு கூட, இந்தியில் பேசுவதை தவிர்த்துவிட்டு ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். யாரையும் பாதிக்காத வண்ணம் ராஷ்மிகா கையாண்ட விதத்தை ரசிகர்கள் பாராட்டிவருகிறேன்.
அதேபோல நடிகர் நாகர்ஜுனா பேசும்போது, ’இந்தி, தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவருக்கும் அவர்களின் மொழியில் வணக்கம் சொல்ல, கன்னட ரசிகர்கள் வந்திருப்பதை புரிந்துகொண்ட ராஷ்மிகா கன்னடத்தில் வணக்கம் சொல்லுமாறு நாகர்ஜுனாவிடம் கோரிக்கை வைத்தார்’, அதற்குபிறகு கன்னட மொழியில் பேசி ரசிகர்களை வரவேற்றார் நாகர்ஜுனா. ராஷ்மிகாவின் இந்த இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.