விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் | ’தெறி’ படமும் பொங்கலுக்கு இல்லை.. ஒத்திவைப்பதாக அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவான 'தெறி' திரைப்படம் பொங்கலுக்கு ரீரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் ஜனநாயகன் படம் தள்ளிப்போன நிலையில், தெறி படத்தின் ரீரிலீஸ் புதிய படங்களுக்கு இடமளிக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை வாரியத்திடம் இருந்து சென்சார் சான்றிதழ் கடைசிவரை கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போய் உள்ளது.
இவ்விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என்பது உறுதியாகியுள்ளது. வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடக்கும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெறி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டு பொங்கலானது ஜனநாயகன் பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது மகிழ்ச்சியை கொடுத்தது. ஜனநாயகன் வரவில்லை என்றாலும் தெறி திரைப்படம் ரிலீஸாவதால் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது தெறி திரைப்படமும் வெளியாகாது என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், பொங்கல் ரிலீஸுக்காக புதிய படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

