’விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை..’ - நடிகர் ஆரி
நடிகர் ஆரி, விஜயின் விவாகரத்து விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனக் கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது என்றும், சமூக ஊடகங்கள் தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரம் தற்போது தமிழ் சினிமா கடந்து தமிழக அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நடிகர் ஆரி அதுசார்ந்த கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார்.
நடிகர் நடிப்பில் வெளியான போர்த் ப்ளோர் படத்தை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பார்த்த நடிகர் ஆரி, பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”நடிகர் மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல பலருக்கும் இது நடக்கிறது. சோசியல் மீடியா வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது.
விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து சொல்வது அநாகரிகமானது. அரசியலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி இரண்டுமே தனி, தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
பெண்களை குறித்து பேசும் அதே வேளையில் ஆண்களை பற்றி யாரும் பேசுவதில்லை. விமர்சனங்கள் வரவேற்க கூடியதுதான். தனிமனித தாக்குதல் வன்முறையாக இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு இது அதிகளவில் நடக்கிறது” என பேசினார்.

