ஐடி துறை பங்குகள் கடும் வீழ்ச்சி.. ஐடி, பிபிஓ துறை வேலைகளின் எதிர்காலம் என்ன?
ஆந்த்ரபிக் நிறுவனத்தின் ஏஜென்டிக் ஏஐ மாடல், ஐடி மற்றும் BPO துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 மணி நேர வேலை 5 நிமிடங்களில் முடியும் என்ற நிலை உருவாகி, பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால், பணியாளர்கள் தேவை குறைவதுடன், மீதமிருக்கும் பணிகளின் தன்மையும் மாறும்.
ஆந்த்ரபிக் என்ற ஏஜென்டிக் ஏஐ மாடல் நிறுவனத்தின் கிளவ்டு கோவொர்க் மற்றும் லீகல் பிளகின் என்ற தளங்கள் தற்போது ஐடி துறையில் பெரும் புயலையே ஏற்படுத்தியுள்ளது. கணினியில் உள்ள ஒரு கோப்பை தானே திறந்து அதை தானே திருத்தி மேலதிகாரிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பும் வேலையை இது செய்கிறது. அதாவது ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு பணியை தாமே இத்தளங்கள் செய்யும். இது போன்ற பணிகளைத்தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செய்துதரப்பட்டு வருகிறது. ஐடி துறை பணிகளில் ஏஐ-யை இதுவரை ஒரு உதவியாளர் போல் பயன்படுத்திவந்த நிலையில், அதை முழு வேலையையும் செய்ய பயன்படுத்தலாம் என்பது ஆந்த்ரபிக் நிறுவனத்தின் புதிய வசதி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
50 மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலை 5 நிமிடங்களில் முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முழு பணியையும் சுயமாகவே செய்துமுடிக்கக்கூடிய இந்த ஏஐ வசதி ஏஜென்டிக் மாடல் என அழைக்கப்படுகிறது. இதனால், ஐடி மற்றும் BPO துறை பணிகளின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்து அத்துறை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் ஐடி, பிபிஓ துறைகளில் பணியாளர்கள் தேவை குறைவதுடன் மீதமிருக்கும் பணிகளின் தன்மையும் மாறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

