இந்திய மதிப்பில் ரூ.1 கோடி! உச்சத்தை எட்டிய பிட்காயின் விலை..
செய்தியாளர் பாலவெற்றிவேல்
உலகின் மிகப் பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin), இதுவரையிலான தனது உச்சபட்ச விலையான $1,25,617 அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இதன் இந்திய மதிப்பு, சுமார் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் ஆகும். இதன் மூலம், ஒரு பிட்காயின் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டி வர்த்தகம் செய்யப்படுவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கணிசமான விலை ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்த பிட்காயின், தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது.
பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
பிட்காயினின் இந்த அதிரடி விலை உயர்வுடன், சந்தையில் உள்ள பிற முக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் (Ethereum) மற்றும் சோலானா (Solana) போன்றவையும் இரட்டை இலக்க (double-digit) வளர்ச்சி கண்டுள்ளன. இது ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தைக்கும் புத்துயிர் அளித்துள்ளது.
தற்போது பிட்காயின் விலை $1,25,000 டாலர் வரம்பிற்கு மேல் நிலைத்திருக்குமா என்பதை முதலீட்டாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், பணம் படைத்தவர்கள் பலர் தொடர்ந்து பிட்காயின்களைப் பயன்படுத்தி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகளாவிய விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.