செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த 2014 மற்றும் 2015 காலகட்டத்தில், ஏமனில் இருந்த ஆட்சியாளர்களை அகற்றிவிட்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தங்களுக்கு ஆதரவாக இருந்த ஆட்சியாளர்களை நீக்கிவிட்டதால், சவுதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இதன்காரணமாக, ஏமனின் வடக்குப் பகுதியில் இருந்துகொண்டு, சவுதி அரேபியாவின் எல்லையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சவுதி அரேபியாவும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிகாலை சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ' மற்றும் பிற எரிசக்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களால் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதோடு, எண்ணெய் செயற்பாடுகளும் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 73 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சவுதி அரேபியா மூலம் ஏமனில் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதல்களுக்கும், அல்-ஹஸ்ம் சிறை மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கும் பதிலடி தரும் விதமாகதான், இந்த நடவடிக்கையை ஹவுதி மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியா தலைமையில செயல்படும் அரபுக் கூட்டணி, இந்த சம்பவத்திற்கு பெரும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது மிகவும் மோசமான செயல்பாடு என்று விமர்சித்ததோடு, இந்த பயங்கரவாத அமைப்பின் விரோதப் போக்கை முறியடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரபுக் கூட்டணி தெரிவித்துள்ளது. ஜிசானில் உள்ள எண்ணெய் ஆலைகளும் திங்கட்கிழமையன்று தாக்கப்பட்டன. தினமும் சுமார் 4 லட்சம் பேரல்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, கடந்த ஜூலை மாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.