தற்கால ஜென் ஸீ தலைமுறையின் புதிய ட்ரெண்ட்தான் சோலோ (SOLO) மேக்ஸிங் (MAXXING). காதல் உறவுகளைத் தேடி நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுவததற்கு பதிலாக, தனிப்பட்ட வளர்ச்சி, மனநலம், தொழில் முன்னேற்றம், மற்றும் நிதி பாதுகாப்பில் கவனம் செலுத்துவதுதான் இதன் அடிப்படை கருத்து.
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள், டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்தாலும், அதனால் ஏற்படும் மனஅழுத்தம், ஏமாற்றம், உறவுகளின் நிலையற்றதன்மை காரணமாகப் பல இளைஞர்கள் காதல் உறவுகளை தவிர்த்து தனிமையான வாழ்க்கையை விரும்பத் தொடங்கியுள்ளதே தற்போது சோலோ மேக்ஸிங் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.
இளைஞர்கள் சோலோ மேக்ஸிங்கைத் தேர்வு செய்ய இரண்டாவது பிரதான காரணம், பொருளாதாரச் சிக்கல். காதல் உறவுகளைப் பராமரிப்பதற்காக வெளியே செல்வது, உணவு, பரிசுகள் போன்றவற்றுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. தற்போதைய பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வால் அந்த பணத்தை தங்களின் எதிர்காலத்துக்காக இளைஞர்கள் சேமிக்க விரும்புகிறார்கள்.
மூன்றாவதாக இன்றைய போட்டி நிறைந்த உலகில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் இளைஞர்களின் முக்கிய இலக்காக உள்ளது. காதல் உறவு, குடும்பப் பொறுப்புகள் சில நேரங்களில் தனிப்பட்ட இலக்குகளுக்கு இடையூறாக என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் சோலோ மேக்ஸிங் வாழ்க்கை முறையால் சமூக உறவுகளிலிருந்து விலகுவது, நீண்ட காலத்தில் தனிமை உணர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தனிமைக்கும், சமூக உறவுகளுக்கும் இடையில் சமநிலையை பேணுவதுதான் நீண்டகால மகிழ்ச்சிக்கான சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள்.