நார்வேயில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு, நார்வே நாட்டைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ஹெல் லிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் திடீரென கேள்வி எழுப்பினார். இதன்மூலம் அவர் ஒரேநாளில் வைரலாகியுள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது நார்வே நாட்டுக்குச் சென்றுள்ளார். நார்வேயில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு, நார்வே நாட்டைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ஹெல் லிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் திடீரென கேள்வி எழுப்பினார். "பிரதமர் மோடி, உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களிடம் நீங்கள் ஏன் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்கிறீர்கள்" என்று கேட்டார். ஆனால் மோடி அதற்கும் பதிலளிக்காமல் வெளியேறினார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்த ஹெல்லே லிங், "உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது, ஆனால் இந்தியா 157ஆவது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனம், அமீரகம் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுடன் இந்தியா பின்தங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார். மேலும், "அதிகாரத்தில் இருப்பவர்கள் என் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றால், நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்பேன். அதுதான் எனது வேலை. எனக்குப் பதில்கள் தேவை, வெறும் மேடைப் பேச்சுகள் மட்டும் போதாது" என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம், அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறவிருந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஹெல் லிங்கை அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற ஹெல் லிங், மேற்கு நாடுகளுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜிடம், இந்தியாவில் மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து காரசாரமான கேள்விகளை எழுப்பினார். இதனால், அந்த செய்தியாளர் சந்திப்பே பதற்றமான சூழலை உருவாக்கியது.
இதற்கு பதிலளித்த ஜார்ஜ், "சில அலட்சியமான தன்னார்வ அமைப்புகளின் அறிக்கைகளை வைத்து இந்தியாவை புரிந்துகொள்ள முயற்சிக்கக்கூடாது. இந்தியாவில் தினம்தினம் பல முக்கியச் செய்திகள் வருகின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சில என்ஜிஓக்கள் கவனம் இன்றி தயாரித்த ஓரிரண்டு அறிக்கைகளை நம்பி நீங்கள் விமர்சிக்கிறீர்கள்" என தெரிவித்தார்.
இதனிடையே ஹெல் லிங், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சீனாவையும் அதன் அதிபர் ஷி ஜின்பிங்கையும் புகழ்ந்து அவர் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் குறிப்பிட்டு, சிலர் அவரை ’வெளிநாட்டு உளவாளி’, ’உளவு பார்ப்பவர்’ மற்றும் ’சீனாவின் கைக்கூலி’ என்றும் அழைத்தனர். அவர், இப்படி கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம் அவரின் முந்தைய செயல்பாடுகள்தான். பிரதமர் மோடியைப் பற்றி சில படங்களையும் கட்டுரைகளையும் அவர் பகிர்ந்திருந்தார். இப்படி, ஹெல் லிங்கிற்கு எதிராக கேலி கிண்டல்கள் மிகவும் கடுமையாக இருந்ததால், லிங் இறுதியில் விளக்கமளித்தார்.
"நான் எந்தவிதமான வெளிநாட்டு உளவாளியும் அல்ல. எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் அனுப்பப்பட்டவள் அல்ல. இதைப் பதிவிட நேரிடும் என்று நான் நினைக்கவில்லை. இதழியல் என்பதே சில நேரங்களில் நேருக்குநேர் கேள்வி கேட்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஹெல் லிங், உலக அளவில் பிரபலமடைந்துள்ளார். நேற்றுவரை தனத் எக்ஸ் தளத்தில் வெறும் 800 பின்தொடர்பவர்களை மட்டுமே கொண்டிருந்த அவர், தற்போது 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அவர், நார்வேஜியன் செய்தித்தாளான டாக்ஸாவிசெனில் ஒரு வர்ணனையாளராக உள்ளார். இந்த செய்தித்தாள், முதல் 10 நார்வேஜியன் ஊடக நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அவரது பத்திரிகைப் பணிகள், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சித்து வந்துள்ளார் என்பதைக் காட்டுகின்றன. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்த உலகின் முன்னால் ஒரு பிரதமர் பதறிப்போய், கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஓடுவது இந்தியாவின் பிம்பத்திற்கு எப்படிப்பட்ட சேதம்? மறைக்க ஒன்றுமில்லை என்றால், எதற்கும் பயப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.