WHO Announced Emergency new strain of the Ebola virus
உலகம்

தீவிரமாக பரவும் அடுத்த வைரஸ்.. உலகுக்கே அவசர நிலை! WHO-வின் அறிவிப்பால் அடுத்த அதிர்ச்சி!

ஆப்ரிக்க நாடுகளில் தீவிரமாக பரவிவரும் எபோலா வைரஸின் புதிய திரிபு காரணமாக உலக நாடுகளுக்கு அவசர நிலை எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Praveen Joshva L

கொரோனாவால் உலகம் கண்ட பேரழிவுக்குப் பிறகு, ஆப்பிரிக்காவின் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் புதிய திரிபுடன் வேகமாகப் பரவி வருகிறது. காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, உகாண்டாவில் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 30 உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில், WHO சர்வதேச அக்கறைக்கான பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, சுனாமி வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக 90% நாடுகளில் லாக் டவுண் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

Ebola Virus

அதன் பின்னர் உலக நாடுகள் ஒற்றுமையாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த சூழலில் ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு (DR Congo) மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.

காங்கோவின் இதூரி (Ituri) என்ற மாகாணத்தில் 'பண்டிபுகியோ' (Bundibugyo) என்ற புதிய எபோலா வைரஸின் புதிய திரிபு வீரியத்துடன் பரவி வருகிறது. அந்த நாட்டில் மட்டும் 500க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தொற்று அண்டை நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா வரை பரவியுள்ள நிலையில், அங்கும் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த தொற்று காரணமாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த, WHO என அழைக்கப்படும் உலக சுகாதார அமைப்பு சர்வதேச அக்கறைக்கான பொதுச் சுகாதார அவசர நிலையை (Public Health Emergency of International Concern - PHEIC) பிரகடனப்படுத்தியுள்ளது.

who

இந்த அவசர நிலை என்பது WHO அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை ஆகும். எனினும் இது 'பெருந்தொற்று அவசர நிலை' (Pandemic Emergency) என்ற தகுதியை எட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் (Dr. Tedros Adhanom) தெளிவுபடுத்தியுள்ளார்.