ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக ஓய்வு பெறுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கேட்டுக்கொண்டுள்ளார். இதை, பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. ஈரானும், மத்திய கிழக்கில் உள்ள அந்நாடுகளுக்கு எதிரான ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக ஓய்வு பெறுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கேட்டுக்கொண்டுள்ளார். இதை, பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து, எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இது உயர்மட்ட ராணுவத் தலைமைகளில் நடைபெறும் ஒரு பரந்த அளவிலான மறுசீரமைப்பிற்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இத்தகைய திடீர் நடவடிக்கை அமெரிக்காவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முதன்முதலில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக பீட் ஹெக்ஸெத் பதவியேற்றதிலிருந்து, பத்துக்கும் மேற்பட்ட உயர் பதவி கொண்ட அதிகாரிகளை நீக்கி வருகிறார். கடற்படையின் உயர்மட்ட சீருடை அதிகாரியான அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி மற்றும் விமானப்படையின் இரண்டாம் நிலைத் தலைவரான ஜெனரல் ஜிம் சில்ஃப் உள்ளிட்ட உயர்மட்ட இராணுவத் தலைவர்களை ஹெக்ஸெத் நீக்கியிருந்தார்.
அதே நேரத்தில், அப்போதைய கூட்டுப் படைத் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் சார்லஸ் சி.கியூ பிரவுனை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நீக்கியிருந்தார். அதன்பிறகு பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மற்ற உயர்மட்ட இராணுவ ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றனர் அல்லது தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த வகையில், ராண்டி ஜார்ஜ் பணிநீக்கமும் அடங்கியுள்ளது. இவர், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் இருந்தார். ஆனால், அதிலிருந்து தப்பித்த அவர், தற்போதைய பணிநீக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக ஜார்ஜின் துணை அதிகாரியும், இராணுவத் தலைமைத் துணைத் தளபதியுமான ஜெனரல் ஜேம்ஸ் மிங்கஸும் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலாட்படை அதிகாரியான ஜார்ஜ், வெஸ்ட் பாயிண்ட் இராணுவ அகாடமியில் பட்டம் பெற்றவர். இவர் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். பொதுவாக நான்கு ஆண்டு பதவிக்காலம் கொண்ட இராணுவத்தின் உயர் பதவிக்கு அவர் 2023-இல் உறுதிசெய்யப்பட்டார். உயர் பதவியை வகிப்பதற்கு முன்பு, ஜார்ஜ் இராணுவத்தின் துணைத் தளபதியாகவும், அதற்கு முன்னதாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டினின் மூத்த இராணுவ ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும், இராணுவத்தின் மூத்த தலைமைப் பதவிகளை ஏற்பதற்கு முன்பு, பைடன் நிர்வாகத்தின்போது 2021 முதல் 2022 வரை ஆஸ்டினின் முதன்மை இராணுவ உதவியாளராகவும் அவர் பணியாற்றினார்.