வெனிசுலா எக்ஸ் தளம்
உலகம்

ரத்த சிவப்பாக மாறிய வானம்.. பீதியடைந்த மக்கள்.. வெனிசுலாவில் அரங்கேறிய நிகழ்வு.. காரணம் என்ன?

இந்த விபத்தில், இதுவரை சுமார் 2,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல பேர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவின் ஈடுபட்டு வருகின்றனர்.

Prakash J

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வானம் ரத்த சிவப்பாக மாறிய நிகழ்வு, மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த ஜூன் 24ஆம் தேதி அடுத்தடுத்து 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் 59,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக நாசா மூலம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் முடிவுகள் தெரிவித்திருந்தன. இந்த விபத்தில், இதுவரை சுமார் 2,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல பேர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவின் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 30ஆம் தேதி மாலை நேரத்தில் கராகஸ் நகர வானம் திடீரென அமானுஷ்யமான முறையில் அடர் ரத்த சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறமாக மாறியது. ஏற்கெனவே, நிலநடுக்கப் பேரழிவின் வடுக்கள் இன்னும் முடியாத நிலையில், வானம் திடீரென ரத்த நிறமாக மாறியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இது மேலும் வரவிருக்கும் ஏதோவொரு பெரிய இயற்கை பேரழிவுக்கான ஆபத்தின் அறிகுறி என்று வதந்திகள் பரவியதால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

ஆனால், இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள், “இது எந்தவொரு ஆபத்தின் அறிகுறியோ அல்லது பூகம்ப எச்சரிக்கையோ அல்ல. இது முற்றிலும் ஓர் இயற்கையான வளிமண்டல நிகழ்வு ஆகும். வெனிசுலா மற்றும் கரீபியன் பகுதிகளில் இத்தகைய தீவிரமான சிவப்பு நிற சூரிய அஸ்தமனத்தை உள்ளூர் மொழியில் 'கண்டிலாஸோ' என்று அழைக்கிறார்கள். சூரிய அஸ்தமனத்தின் போது, சூரியன் அடிவானத்திற்கு கீழே செல்லும்போது, அதன் ஒளிக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தில் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

அப்போது அலைநீளம் குறைந்த நீல நிற ஒளிக் கதிர்கள் வளிமண்டல வாயுக்களால் சிதறடிக்கப்பட்டு, அலைநீளம் அதிகமான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறக் கதிர்கள் தெரியும். இதனாலேயே வானம் சிவப்பு நிறமாகத் தெரிந்தது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துகள்களும் சூரிய ஒளியை மேலும் சிதறடித்ததால், வானத்தின் சிவப்பு நிறம் வழக்கத்தைவிட மிக அடர்த்தியாகவும், ரத்த நிறத்திலும் காட்சியளித்தது. கோடைகாலத்தில் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து வீசும் வர்த்தகக் காற்றால் மிக நுண்ணிய மணல் துகள்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வெனிசுலா பகுதிக்கு வருவது வழக்கம். இந்த ஆப்பிரிக்கத் தூசிகளும் இந்த அடர் சிவப்பு நிறத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.