\
earthquake in Venezuela
earthquake in VenezuelaTwo football players have lost their families

குடும்பத்தை இழந்த கால்பந்து வீரர்கள்.. மகனை காக்க உயிர் விட்ட தாய்.. வெனிசுலா நிலநடுக்கத்தால் சோகம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டு புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் தங்கள் குடும்பத்தை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24 ஆம் தேதி மாலை இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2, 7.5 என பூமிக்கு அடியே வெறும் 10 முதல் 20 கி.மீ ஆழத்திலேயே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் வெனிசுலாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எண்ணற்ற கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில், கடலோரத்தில் உள்ள லா குவைரா மற்றும் தலைநகர் கராகஸ் ஆகிய இடங்கள் இந்த நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி பலி எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.அதே போல சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போய் தேடப்பட்டு வருகிறார்கள் என்றும் வெனிசுலா அரசு கூறியுள்ளது.

Lucas Federico Trejo family
Lucas Federico Trejo family

இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தால் கால்பந்து வீரர் ஒருவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஹோ, வெனிசுலாவின் 'மாரிடிமோ டி லா குவைரா' (Marítimo de La Guaira) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரின் குடும்பத்தினர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு நிலநடுக்கத்தால் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. தொடர்ந்து இடிபாடுகளிலிருந்து அவரது மனைவி யானினா மரனெல்லா (Yanina Maranella), மற்றும் அவரது இரு குழந்தைகளான ஆரோன் (Aaron), அய்ன்ஹோவா (Ainhoa) ஆகிய மூவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Hector Bello
Hector Bello

அதேபோல வெனிசுலாவை சேர்ந்த மற்றொரு கால்பந்து வீரரின் குழந்தை இந்த நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்த போதிலும், அவரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நிலநடுக்கத்தின் போது வெனிசுலா கால்பந்து நட்சத்திரமான ஹெக்டர் பெல்லோவின் (Hector Bello) மனைவி ஆண்ட்ரியா (Andrea Bello) இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். மீட்புக் குழுவினர் இவர்களை மீட்டபோது, அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில், அவரது உடலின் அடியில் இருந்த 1 வயதுக் குழந்தை எவ்விதக் காயமுமின்றி உயிருடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் உலகளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் வெனிசுலாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பல மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வரும் சூழலில், அது மீட்புப்பணியை மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இதனால் வெனிசுலாவில் உயிரிழப்பு கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

earthquake in Venezuela
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் விவகாரம்.. திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்.. அனுமதி மறுப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com