அமெரிக்கா - ஈரான் போர் web
உலகம்

’ஓமன் மீது குண்டுவீசுவோம்..’ 2வது முறையாக ட்ரம்ப் Open Warning.. உடனே ஈரான் கொடுத்த பதிலடி!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திற்கு ஓமன் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Rishan Vengai

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் நடுநிலையாக இருந்த ஓமன், அமெரிக்கா-ஈரான் மோதலின் நடுவில் சிக்கியுள்ளது. ஈரான், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களை ஓமன் மூலம் நிர்வகிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்ததையடுத்து, ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஓமன் மீது குண்டுவீச்சு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன; அமைதி ஒப்பந்தம் முன்னேற்றமின்றி தடைபட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் ஆகிய இரண்டுதரப்பின் பக்கமும் சாயாமல் நடுநிலையில் இருந்துவந்த ஓமன், இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல்களால் பல்வேறு தாக்குதல் மற்றும் பாதிப்புகளுக்கும் உள்ளானது. இப்படி இருக்கும் சூழலில் சமீபத்திய ஈரான் அறிவிப்பால் கடுப்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓமன் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என இரண்டாவது முறையாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஓமனை குண்டுவீசி தகர்த்துவிடுவோம் என ட்ரம்ப் எச்சரிப்பது இது முதல்முறையல்ல. இதற்கு 2 மாதங்களுக்கு முன்பும் ‘ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை ஓமன் எடுத்தால் அந்நாட்டை சின்னாபின்னமாக்கி தகர்த்துவிடுவோம், அவர்களை காப்பாற்ற யாராலும் முடியாது’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

இந்நிலையில் தான் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் பேசப்போவதில்லை என்றும், ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் ட்ரம்ப் 2வது முறையாக ஓமன் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கியுள்ளது. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகின் 20% எண்ணெய் வர்த்தக பாதையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்துவருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டும், அமெரிக்காவும் அதன் முற்றுகைகளை அகற்றாமல் இருந்துவருகிறது.

அதிபர் ட்ரம்ப்

இதற்கிடையில் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களை நிர்வகிப்பது குறித்து ஓமனுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக ஈரான் தெரிவித்திருக்கும் நிலையில், ஓமன் மீது குண்டுவீசப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு 'ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தைகளோ உரையாடல்களோ நடைபெறவில்லை என்றும், கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது என்றும், அதேநேரம் ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தேதான் இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தசூழலில் தான் அமெரிக்கா, ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளான கடல்வழி முற்றுகை மற்றும் தடைகளை நீக்குவது, அத்துடன் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது ஆகியவற்றை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டேதான் இருக்கும் என்று ஈரான் தரப்பில் அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.