'போர் வேண்டாம்.. நிறுத்திக்கோங்க!' ஈரான் போரில் களமிறங்கும் மிக முக்கியப் புள்ளி!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்திற்கு தூதரக ரீதியான தீர்வை காண்பதற்கு அதிகபட்சமாக பேச்சுவார்த்தையை பயன்படுத்துவது முக்கியம் என எர்டோகன் குறிப்பிட்டதாக துருக்கி அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்ட துருக்கி, ஈரானுடன் நேரடி எல்லையை பகிர்ந்துகொள்கிறது. ஈரான் மீதான போருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் துருக்கி, அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது. மேலும், இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை ’முழுமையான தாக்குதல்’ நோக்கில் மாற்றும் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளும் முடங்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல்களை துருக்கி விமர்சித்துள்ளதுடன், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ட்ரம்ப்–எர்டோகன் பேச்சில் இருதரப்பு உறவுகள், காஸா போர் மற்றும் துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

