கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல் நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வாடிகன் தெரிவித்துள்ளது. போப்பிற்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆக்சிஜன் மற்றும் இரத்தம் செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.