model image
model image freepik
உலகம்

’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!

Prakash J

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். ஆனால் அத்தகைய கண்களால் இருவரும் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றனர். அந்தவகையில், காதலுக்கு கண்கள் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியான கண்ணை, அமெரிக்காவில் காதலி ஒருவர் ஊசியால் குத்தியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மியாமி டே கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்த்ரா ஜிமினெஸ். 44 வயதான இவர், தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய காதலர் வேறு பெண்களைப் பார்ப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காதலி ஜிமினெஸ், காதலரின் கண்ணில் வெறிநாய்க்கடிக்குச் செலுத்தப்படும் ஊசியை எடுத்துக் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். ஏற்கெனவே தாம் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த காதலர், உடனே காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.

போலீசார் அங்கு விரைந்து வந்து, அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதற்கிடையே தப்பியோடிய காதலி ஜிமினெஸ் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் படுத்து உறங்கியுள்ளார். அவரைக் கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, தன் காதலரின் கண்ணில் தாம் ஊசியால் குத்தவில்லை எனவும், அவரே தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: காலிஸ்தான் தலைவரை கொல்ல சதி: இந்தியா மீது அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு-மீண்டும் வம்பிழுக்கும் கனடா?