காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்றது.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 65,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை அங்கு தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸாவின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் முன்னேறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ள இஸ்ரேல், அங்குள்ள நகர குடிமக்கள் உடனே வெளியேற வேண்டுமென எச்சரித்துள்ளது. அதற்காக, சலா அல்-தின் என்ற சாலையையும் இஸ்ரேல் திறந்துவிட்டுள்ளது. இந்த வழியாக, இன்று (செப்.19) மதியத்திற்குள் காஸாவிலிருந்து தெற்கு நோக்கி மக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், வடக்கு காஸா, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாக படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, இஸ்ரேல் அரசு போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்றது. காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 14 உறுப்பினர்களின் ஆதரவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, ஆனால், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இது காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதாக உள்ளதாக ஐ.நா. மற்றும் பிற அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஐ.நா சபையில் அதிகாரம் பொருந்திய துணை அமைப்புகளில் மிகவும் முக்கியமானது, பாதுகாப்பு கவுன்சில். சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்வதுதான் இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் வேலை. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த முடிவையும் உலக நாடுகள் அனைத்தும் கட்டாயம் மதிக்க வேண்டும். இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். அதேசமயத்தில், ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இந்த ஐந்து நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து, வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு. ஐந்து பேரில் யார் ஒருவர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலும், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்துவிடும். மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தனக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே இந்த வீட்டோ அதிகாரம். இதைத்தான் தற்போது அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா, உக்ரைன் போரின் இதைப் பயன்படுத்தியதால் அமெரிக்கா தற்போது இதைப் பயன்படுத்தி ரஷ்யாவைப் பழிவாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றும் ஒரு திசையிலும், ரஷ்யாவும் சீனாவும் இன்னொரு திசையிலும் எப்போதும் இருக்கின்றன. இதனால் பல முக்கிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதே கிடையாது. மேலும் இந்த வீட்டோ அதிகாரத்தை அதிகமுறை பயன்படுத்திய நாடுகளில் ரஷ்யா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.