அமெரிக்க பென்டகன் வெளியிட்ட புதிய பட்டியலில் அலிபாபா, பைடு, டென்சென்ட், பிஒய்டி போன்ற சீன முன்னணி நிறுவனங்கள் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வகைப்படுத்தப்பட்டதால், அமெரிக்க இராணுவ ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி நிதி மற்றும் முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
செய்தியாளர்; M. மீரா
அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட், பைடு இன்க் மற்றும் பிஒய்டி கோ (BYD Co.) உள்ளிட்ட சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் சில, சீன ராணுவத்திற்கு ஆதரவளிப்பதாக பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. இதன்மூலம், சீனாவின் மிக முக்கிய நிறுவனங்களை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதுவதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் 'மக்கள் விடுதலை இராணுவத்திற்கு' (People’s Liberation Army) உதவுவதாகத் தாங்கள் கண்டறிந்துள்ள நிறுவனங்களின் பட்டியலைப் புதுப்பித்து, அமெரிக்கா பாதுகாப்புத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால், எந்த விளக்கமும் இன்றி சில நிமிடங்களிலேயே அப்பட்டியல் திரும்பப் பெறப்பட்டது.
தற்போதைய பட்டியலில் சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களான அலிபாபா (Alibaba), பைடு (Baidu) மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Tencent Holdings Ltd.) ஆகியவை அந்நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உதவுகின்றன என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. டென்சென்ட் நிறுவனம் ஏற்கெனவே இப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததுடன், அதிலிருந்து தன்னை நீக்குமாறும் கோரி வருகிறது. அதேவேளையில், சீனாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி (BYD)-யும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் அமெரிக்க இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்வதையோ அல்லது ஆராய்ச்சி நிதியைப் பெறுவதையோ கட்டுப்படுத்தியுள்ளது பென்டகன். மேலும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும் ஓர் அபாய அறிகுறியாகவும் பரவலாகக் கருதப்படுகிறது.
டொனால்டு ட்ரம்ப் பெய்ஜிங்கில் தனது சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்த ஒரு மாதத்திற்குள்ளேயே இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.