அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் போரின் முதல் 3 வாரத்தில் ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் தாக்குதலால் அமெரிக்க இராணுவத்திற்கு 1.4 முதல் 2.9 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. F-15E, F-35 போர் விமானங்கள், MQ-9 ரீப்பர் ட்ரோன்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ரேடார் அமைப்புகள், USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களாலேயே, பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ உபகரணங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
அதேவேளையில் அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போரில் முதல் 3 வாரங்களில் மட்டும் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.29,000 கோடி வரை) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த இழப்பு குறித்து பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மார்ச் 1ஆம் தேதி 3 F-15E ரக போர் விமானங்கள் குவைத் விமானம் ஒன்றால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன. மார்ச் 16ஆம் தேதி ஒரு F-35 ஸ்டெல்த் ஜெட் விமானம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டதை அடுத்து அவசரமாகத் தரையிறங்கியது. ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 5 கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. 12க்கும் மேற்பட்ட MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களில் பல ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவை மற்றும் சில தரையில் அழிக்கப்பட்டவை. சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இருந்த விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளையும் ஈரான் சேதப்படுத்தியுள்ளது.
மார்ச் 12ஆம் தேதி அன்று யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) என்ற விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது; அக்கப்பல் தற்போது கிரீஸில் உள்ள சூடா விரிகுடாவில் பழுதுபார்க்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. நடந்து வரும் இந்த மோதலில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றும் இழந்த ராணுவத் தளவாடங்களை மீண்டும் வாங்குவதற்காக சுமார் 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை ஒதுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.