Ahmed al-Sharaa, donald trump Chat Gpt
உலகம்

47 ஆண்டுகளுக்குப் பிறகு.. அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.. ஆச்சர்யத்தில் சிரியா!

சிரியாவில் உள்நாட்டுப் போர் 14 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முடிவுக்கு வந்தது.

Prakash J

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் (State Sponsors of Terrorism) பட்டியலில் இருந்த சிரியாவை, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வமாகப் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதுதான் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சிரியாவுக்கு ஒரு திருப்புமுனையாகப்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன நிகழ்ந்தது? வாருங்கள், பார்க்கலாம்...

1979-ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று சிரியாவை, தனது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. சிரியாவின் அப்போதைய அதிபர் ஹாஃபிஸ் அல்-அசாத் (Hafez al-Assad) தலைமையிலான அரசு, சர்வதேசப் பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்ததே இதற்குக் காரணமாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து, அந்நாடு பொருளாதாரத் தடைகளையும் சந்தித்தது. இந்த நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போர் 14 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்த ஆட்சி கவிழ்ப்பில் முக்கியப் பங்காற்றிய கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல் ஷரா சிரியாவின் அதிபரானார்.

அகமது அல் ஷரா

பின்னர், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை, அகமது அல் ஷரா சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, சிரியாவை தனது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அந்நாட்டை நீக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஜூலையில் அந்நாட்டின் நாடாளுமன்ற அமைப்பான காங்கிரஸ் முன் தீர்மானத்தை கொண்டுவந்தார். 45 நாட்கள் காங்கிரஸ் பரிசீலனைக்குப் பின் இது தற்போது அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து சிரியா முற்றிலும் விலகி நிற்கும் என அதிபர் அகமது அல் ஷரா அளித்த உறுதிமொழிகள் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தியுள்ளார்.

Trump

மேலும், சிரியா நாட்டின் மீதான தடை மட்டுமின்றி, அகமது அல்-ஷராவால் வழிநடத்தப்பட்ட 'ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம்' (HTS) அமைப்பின் மீதிருந்த பயங்கரவாத அமைப்பிற்கான தடையையும் அமெரிக்க வெளியுறவுத் துறை விலக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள சிரிய அதிபர், “வேதனை நிறைந்த பழைய காலம் முடிவுக்கு வந்து, வளர்ச்சியும் மறுசீரமைப்பும் கொண்ட புதிய உலகிற்குள் நாடு நுழைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் இருந்து சிரியா நீக்கப்பட்டிருப்பதால், இனி பொருளாதாரரீதியாக அந்நாடு புத்துயிர் பெறும் என நம்பப்படுகிறது.