அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக கூறி ஈரான் மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாகத் தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.
இந்தச் சூழலில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தப் போர் மீண்டும் தொடங்கியது. இரு தரப்பும் மாறமாறி தாக்கிக்கொண்ட சூழலில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இன்னும் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், அதுவரை ஈரானின் துறைமுகங்களில் இருந்து எந்த ஒரு கப்பலும் வெளியேற முடியாத வகையில் அமெரிக்க படைகள் முற்றுகையிடும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஈரான் அமெரிக்கா போர் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.