Noel Rodriguez-Alvarez
Noel Rodriguez-Alvarez Everman Police
உலகம்

பெற்ற மகனை மளிகைக்கடையில் விற்ற தாய்! என்ன காரணம்? டெக்சாஸில் நடந்தது என்ன? பகீர் தகவல்!

Janani Govindhan

‘அம்மாவின் அன்புக்கு ஈடு இணை ஏது’ என்ற பேச்சு பரவலாகவே பொதுச் சூழலில் இருப்பதுண்டு. இருப்பினும் உலகின் ஒரு சில பகுதிகளில் பெற்றெடுத்த குழந்தைகளை அம்மாக்களே பரிதவிக்கவிடும் சில செயல்களும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

அந்த வகையில், தனது ஆறு வயது மகனை சூப்பர் மார்க்கெட்டில் விற்றுவிட்டு தப்பிச்சென்றிருக்கிறார் தாய் ஒருவர். இந்த நிகழ்வு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்திருக்கிறது.

Noel Rodriguez-Alvarez

நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் என்ற 6 வயது சிறுவனை அவரது தாயார் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்பவர் டெக்சாஸில் உள்ள ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டுச் சென்றிருக்கிறாராம். கடந்த மார்ச் மாதம்தான் நோயல் காணாமல் போனது குறித்து எவர்மேன் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவர் 2022-லேயே காணாமல் போயிருக்கிறார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அதன்படி, நோயலின் உடலுக்குள் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாகவும், தனக்கு புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகள் மீது நோயல் பொசசிவ் ஆக இருப்பதாகவும், எங்கே அவர்களை நோயல் காயப்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்திலும் தாய் சிண்டி இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து குடும்பத்தார் தரப்பில் முதலில் விசாரிக்கப்பட்டபோது, நோயல் தன்னுடைய தந்தையுடன் இருப்பார் என நம்புவதாக சிண்டி கூறியிருக்கிறார். அதன் பின்னர் சிண்டியின் அந்த குடும்பத்தாரிடம் விசாரித்த போதுதான், சிறுவன் நோயல் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

Noel Rodriguez-Alvarez | Missing boy

இதுபோக, தன்னுடன் நோயல் இருந்தபோதும் அவனுக்கு சாப்பாடு, தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் இருந்திருக்கிறாராம் தாய் சிண்டி. ஏனெனில், தண்ணீர் குடித்தால் நோயலின் டையப்பர் ஈரமாகி அதனை மாற்ற வேண்டிய நிலை வரும் என்பதால் இப்படி செய்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சிண்டி தன்னுடைய முதல் கணவரை விட்டு பிரிந்த பிறகு அர்ஷ்தீப் சிங் என்பவரை மணந்திருக்கிறார். சிண்டிக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கும் பிறந்தவர்கள்தான் அந்த இரட்டை குழந்தைகள். அவர்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்த சிண்டி நோயலை அலட்சியப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் நோயல் காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Cindy Rodriguez, Arshdeep Singh

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் சிறுவன் நோயல் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே காணாமல் போயிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. முறையாக சாப்பாடு கொடுக்காததால் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்த நிலையிலேயே சிறுவன் நோயலை சிண்டியும் அவரது இரண்டாவது கணவர் அர்ஷ்தீப்பும் கைவிட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து சிறுவன் நோயல் காணாமல் போன புகாரை தற்போது மரண விசாரணையாக மாற்றியுள்ள எவர்மேன் போலீசார், உடலை தேடி மீட்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என அமெரிக்க ஊடகச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

மேலும் நோயல் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே டல்லாஸ் ஃபோர்ட்டில் இருந்து சிண்டியும் அர்ஷ்தீப் சிங்கும் தங்களது குழந்தைகளுடன் இந்தியாவுக்கு தப்பி வந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் மீது சிறுவன் நோயலை ஆபத்தான நிலையில் கைவிட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.