அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ஈரான் போரை வெற்றிகரமாக முடிக்க $200 பில்லியன் நிதி கோரியுள்ளார். கெட்டவர்களை கொல்ல பணம் தேவைப்படுவதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக யாரையும் கொல்ல பயமில்லை என்றும் அவர் கூறினார். இஸ்ரேல், வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு அளிக்கின்றன.
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ராணுவத்திற்கு கூடுதல் நிதி கோருவதுடன், போரை வெற்றிகரமாக முடிப்பதே தங்களது இலக்கு என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
பென்டகன் சார்பில் காங்கிரஸிடம் சுமார் $200 பில்லியன் (ரூ. 16 லட்சம் கோடிக்கும் மேல்) கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஹெக்செத், "கெட்டவர்களைக் கொல்ல பணம் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் செய்த செலவுகளுக்காகவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்த உள்ளோம்" என்று கூறினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக யாரையும் கொல்லத் தங்களுக்குப் பயம் இல்லை என்றும், ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தப் போரில் இஸ்ரேல் ஒரு வலிமையான கூட்டாளியாகத் திகழ்வதாகவும், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குப் பெரும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் பாராட்டினார்.
ஈரானுடனான இந்தப் போர் எப்போது முடியும் என்பது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளிலேயே உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிபர் என்று கருதுகிறாரோ, அன்று போர் நிறுத்தப்படும் என்று அவர் விளக்கமளித்தார். உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் தியாகம் குறித்துத் தனது 13 வயது மகனிடம் விளக்கியதாகக் கூறிய ஹெக்செத், "உன்னுடைய தலைமுறை அணுசக்தி அச்சுறுத்தல் இல்லாத ஈரானை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்" என்று உருக்கமாகப் பேசினார்.
ஹெக்செத் தனது உரையில் புஷ், ஒபாமா மற்றும் பைடன் ஆகியோரின் காலத்து போர்களை "முட்டாள்தனமானவை" என்று விமர்சித்தார். ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் போர்களைப் போல இது ஒரு முடிவில்லாப் போராக இருக்காது என்றும், அமெரிக்கா தனது சொந்த விதிமுறைகளின்படி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் தன்னைச் சந்தித்து, "இந்தப் பணியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டாம், இதை முழுமையாக முடித்துவிடுங்கள்" என்று கூறியதாக ஹெக்செத் தெரிவித்தார். இது போன்ற ஒரு தெளிவான போரைத் தொடங்கி, அமெரிக்க வீரர்களின் கௌரவத்தைக் காத்ததற்காக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.