பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்க நிபந்தனையை ஈரான் மறுத்து வரும் நிலையில், “இனி நல்லவனாக இருக்க முடியாது” என ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீது கூட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கடுமையான பதிலடிகளை கொடுக்கப்போவதாக தெரிவித்த ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை தாக்கி வந்தது. இந்த சூழலில் தான், மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. தொடர்ந்து, உலகின் 20 சதவீத எரிவாயு வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் போரின் காரணமாக, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடுமையான இழப்புகளை சந்தித்து வந்த நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக இந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், ஈரான் தனது அனைத்து யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஈரானிடம் ஏற்கனவே உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் அல்லது மூன்றாம் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் ஈரான் நிரந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாம் இருந்து வருகிறது. இந்த சூழலில் தான், மத்தியக் கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இந்த சூழலில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியான ஈரானுக்கு மிரட்டல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறார். அதன்படி, இன்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஈரானியர்கள் தங்களை சரிபடுத்திக் கொள்ளவில்லை. அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விரைவில் அவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும். இனி நல்லவனாக இருக்க முடியாது” எனத் தெரிவித்துளார். தொடர்ந்து அந்தப் பதிவில் தான் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ட்ரம்பின் இந்தப் பதிவு பேசுபொருளாகியுள்ள நிலையில், ட்ரம்ப் மிரட்டல் மட்டுமே விடுத்துவருவதாக தெரிவித்து வருகின்றனர்.