60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் எச்-1பி விசாதாரர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கிரீன் கார்டு கோரும் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவைவிட்டு வெளியேறி, தங்கள் சொந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா, செப்டம்பர் 2025 முதல் $100,000 ஆக உயர்த்தப்பட்டதால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1990இல் உருவாக்கப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது. இன்னொருபுறம், பெரும்பாலான H1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவிற்கு வந்தவுடன், கிரீன் கார்டு வரிசையில் நுழைந்து நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர்.
இந்த நிலையில், பணி விசா தேர்வு முறையில் பெரிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு H1B விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்ட தரவுகளின்படி, முறையாக சமர்ப்பிக்கப்பட்ட H-1B பதிவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38.5 சதவீதம் குறைந்துள்ளன. அதாவது, 2026 நிதியாண்டில் 343,981 ஆக இருந்த பதிவுகளின் எண்ணிக்கை, 2027ஆம் நிதியாண்டில் 211,600 ஆக குறைந்துள்ளது. அமெரிக்காவில் வேலை தேடும் இந்திய தொழில் வல்லுநர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் H-1B விசா திட்டம், சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. போலி நிறுவனங்கள் மூலம் இத்தகைய விசாக்கள் வழங்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, 60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் எச்-1பி விசாதாரர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எச்-1பி விசா விதிமுறைகளின்படி, விசாதாரர் வேலை இழந்தால் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். ஏற்கெனவே மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
இந்தச் சூழலில், கிரீன் கார்டு கோரும் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவைவிட்டு வெளியேறி, தங்கள் சொந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. கிரீன் கார்டு என்பது வெளிநாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமைகளை வழங்கும் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை ஆகும். அதாவது, கிரீன் கார்டு வைத்திருப்பவர் அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்க முடியும்; பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரிய வகை செய்யும்; மேலும் அமெரிக்காவிலேயே கல்வி கற்கலாம், விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கலாம். மேலும் தகுதி பெற்றால் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, ’கிரீன் கார்டுக்காகத் தங்கள் தகுதியை மாற்றிக்கொள்ள விரும்பும் புலம்பெயர்ந்தோர், இனி பொதுவாக இந்தச் செயல்முறையின்போது அமெரிக்காவிற்குள் தங்கியிருக்காமல், தங்கள் சொந்த நாடுகளில் இருந்தே விண்ணப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைக்கு மாறக் காத்திருக்கும் பல இந்தியர்களைப் பாதிக்கக்கூடும்.
கிரீன் கார்டு செயல்முறை மூலம், கடந்த 2024ஆம் நிதியாண்டில், 49,700 இந்திய வம்சாவளி குடியேறிகள் அமெரிக்கக் குடிமக்களானார்கள். இதன்மூலம், மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உருவெடுத்தனர். மொத்த குடியுரிமைப் பெறுதல்களில் இந்தியர்கள் 6.1 சதவீதத்தைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.